அன்புள்ள அம்மாவிற்கு,நலம் நலமறிய ஆவல்..

அன்புள்ள அம்மாவிற்கு, பொம்மி எழுதிக்கொள்வது..
நான் இங்கு நலம், எனக்கு இங்க ஹாஸ்டல்-ல எந்த பிரச்சனையும் இல்லை. நானும் பாரதி பாப்பாவும் நல்லா படிக்கிறோம்.

அங்க ஊருல நிறைய மழை பெய்ஞ்சதுனு சயின்ஸ் மிஸ் சொன்னாங்க, நம்ம  வீடு நிறையா ஒழுகுதா?. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா நீ சித்தி வீட்டுக்கு வேணா போயி இருந்துக்க. அவுங்க வீடு பங்களா தானே, அப்ப்டியே அப்பாவையும் தெனம் பாத்த மாதிரியும் இருக்கும். ஆனா சித்திகிட்ட நீ எதுவும் பேசாதே, சண்ட போடாதே.

இங்கியும் மழை தான். அதனால தான் நீ போன் போட்டுருந்தா கூட  கிடைக்காம போயிருக்கும். ஸ்கூல என்னை  அடுத்த மாச கடைசில  டெல்லி கூட்டிட்டு போறாங்க. அறிவியல் கண்காட்சியில நான் ஜெயிச்சதுக்கு அங்க தான் பரிசு தராங்களாம். மிஸ் எனக்கு எல்லாம் செலவும் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க.

நான் போட்டில ஜெயிச்சதால, நான் எவ்வளவு படிச்சாலும் அதுக்கான செலவ, எங்க ஸ்கூல் டீச்சர் எல்லாம் அவுங்க சங்கத்திலிருந்து குடுக்குறோம்-னு சொல்லிட்டாங்க. அதனால நான் காலேஜ் போயி பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போறேன்.

நான் நல்லா படிச்சு, உனக்கு பெரிய பங்களா வீடு வாங்கி தாரேன். பாப்பாவையும் நல்லா படிக்க வைக்கப்போறேன்.


இங்க பாப்பா திடீர் தூக்கத்துல எந்திரிச்சு கத்துறா, நான் அவளுக்கு  நீ சொன்ன மாதிரி, நெத்தியில திருநீறு பூசி தூங்க வைக்குறேன்.

பொங்கலுக்கு கண்டிப்பா எங்கள வந்து கூட்டிட்டு போ...
தீபாவளிக்கு எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க, நாங்க மட்டும் இங்க இருந்தா கஷ்ட்மாயிருக்கு.

இந்த லட்டர படிச்சுக் காட்டும் லோகு அக்கா வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.

         இப்படிக்கு, 
           பொம்மி.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,  வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறோம்..

22 கருத்துரைகள்:

தினேஷ்குமார் said...

மனம் நெகிழ்ந்துபோனேன் பாரதி

மாணவன் said...

//பொங்கலுக்கு கண்டிப்பா எங்கள வந்து கூட்டிட்டு போ...
தீபாவளிக்கு எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க, நாங்க மட்டும் இங்க இருந்தா கஷ்ட்மாயிருக்கு.//

மனது வலிக்கிறது ஒரு ஏழை மாணவியின் நிலைமையை உணர்வுகளுடன் வலிகளை கலந்து சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் பாராட்டவும் நன்றி சொல்லவும் வார்த்தைகளே இல்லை...

நெகிழ வைத்துவிட்டீர்கள்

தொடருங்கள்.....

மாணவன் said...

இதுபோன்ற ஒரு ஏழை மகள் தன் அம்மாவுக்கு கடிதம் எழுதி தன் கஷ்டங்களை உணர்வுகள் மூலம் பதிவு செய்கின்ற பாடல் வடிவில் கடிதத்தின் பதிவு ஒன்று நானும் பதிவிட்டுள்ளேன் நண்பர்கள் இந்த கடிதப் பதிவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

பதிவின் லிங்க்: http://urssimbu.blogspot.com/2010/12/blog-post.html

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........ என்ற தலைப்பில்...

நன்றி

deen_uk said...

பாரத்... பாரதி... said...

DEEN_UK அவர்களுக்கு உங்கள் வலைப்பதிவுகளை ஆவலாய் தேடினேன். காலியாக இருக்கிறது. என்ன ஆச்சு?
October 10, 2010 7:13 PM

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் பாஸ்..உங்களுக்கு பின்னூட்டம் அனுப்பியபிறகு மறுபடியும் உங்கள் சைட் வரமுடியாமல் போய் விட்டது.. உங்கள் சைட் லிங்க் மிஸ் பண்ணிவிட்டேன்..இன்று தான் ragariz blogs ல் தங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பு தான் உங்கள் லிங்க் கண்டுபிடித்தேன்.எனவே தான் அக்டோபரில் கேட்ட கேள்விக்கு டிசம்பரில் பதில் தருகிறேன்!! மேலும் நான் பதிவர் இல்லை நண்பரே.போரடித்தால் தமில்ப்லோக்ஸ்ல ஒரு ரௌண்ட்ஸ் போவேன்! ஏதாவது பிடித்த பதிவு இருந்தால் பின்னூட்டம் அனுப்புவதுடன் சரி! அந்த ரௌண்ட்சில் உங்கள் பதிவு பிடித்து இருந்ததால் அனுப்பி இருந்தேன்! மற்றபடி நானும் ஒரு ப்ளோக் வைத்துள்ளேன்! ஆனால் சும்மா உப்புக்கு சப்பு நு சொல்வாங்களே?! அப்டிதான்! பதிவு எழுதுவதற்காக இல்லை..! ஆனால் அதில் ஒரு பயனும் இருக்கிறது..நான் அப்பப்போ படிக்கும் தமிழ் ப்ளொக்ஸ் அதில் வைத்துள்ளேன்...உங்களுக்கு மனசு கஷ்டமா வருத்தமா ,வாழ்க்கை வெறுத்து போய்...அழுகை வர மாதிரி இருக்கும் நேரத்தில்,என்னோட அந்த ப்ளாக் போய் பாருங்க! விழுந்து விழுந்து சிரிப்பீங்க!! காமெடி பதிவு போட்டு இருப்பேன்னு நினைக்காதீங்க! அந்த சைட் ல ஒண்ணுமே இருக்காது! சரியான காமெடி பீசு சைட் அது..இனி உங்களையும் அதில சேர்த்து ,உங்க பெருமையையும் கெடுத்துடுறேன் கவலை படாதீங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனம் நெகிழ்ந்துபோனேன்

ஆமினா said...

நெகிழ வைத்த கடிதம்

pichaikaaran said...

நெகிழ வைத்த எழுத்து

பத்மநாபன் said...

``வீடு ஒழுகுதா``..இந்த கேள்வியில் குடும்ப நிலையை எடுத்து சொல்லி, ``பங்களா வாங்கித்தருகிறேன்`` என்பதில் பொம்மியின் பொறுப்புணர்வை எடுத்துசொல்லி, தங்கையை கவனிப்பதில் கடமையுணர்வை காட்டி..லோகு அக்காவை விசாரித்ததில் நடைமுறை அறிவை காட்டி ஒரு கடிதத்தில் காவியம் படைத்துவிட்டீர்கள் பாரத்..பாரதி...

ஜெய்லானி said...

நெகிழ வைத்த பதிவு

வைகை said...

ம்ம்ம்... நம்ம நாட்ல நிறைய மாணவர்களின் நிலை இதுதான்!! கவலை வேண்டாம் மாற்றம் வரும்!!!

வைகை said...

ஆமா... சந்தடி சாக்குல உங்கள பாப்பான்னு சொல்லிக்கிட்டிகளா?!!!!!!!

லீலா said...

மாணவனின் அறிவு அன்பு புத்திகூர்மை அனைத்தையும் நெகிழ வைக்கும் நடையில் எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

மனதை நெகிழ வைக்கிறது . பரிசு, ஆசிரியர்களின் ஆதரவு என்ற நம்பிக்கை கீற்றுகள் மனதிற்கு கொஞ்சம் இதமாய் இருக்கின்றன

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்கள் தளம் இப்போது தரக்கிறதா என்று பார்க்க வந்தேன். திறக்கிறது.

தினேஷ்குமார் said...

சுவாமியே சரணம் ஐயப்பா பாரதியோட வலைதளம் திரும்ப கிடைச்சதுக்கு நன்றி ஐயப்பா

மாணவன் said...

வலைத்தளம் திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாரதி...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

தொடர்ந்து செல்லுங்கள் நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

வாழ்க வளமுடன்

நன்றி
நட்புடன்
உங்கள்.மாணவன்

Unknown said...

நெகிழவைத்து விட்டீர்கள்

THOPPITHOPPI said...

முடியல

R. Gopi said...

நேர்மறை எண்ணங்களை இந்தச் சிறுமியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்

சென்னை பித்தன் said...

வறுமையிலும் நம்பிக்கை,படிப்பின் மீதுள்ள பிடிப்பு,குடும்பப் பாசம்,அனைத்தையும் வெளிப்படுத்தும் கடிதம்!நெகிழ்ச்சி!

Unknown said...

ஒரு ஏழை மாணவியின் உருக்கமான கடிதம்..

ரொம்ப அருமையாக பதிவு செய்துருக்கிங்க..

Unknown said...

அன்பு பதிவர்களுக்கு எமது வலைப்பூ தற்போது திறக்கிறது.
http://bharathbharathi@blogspot.com.
இக்கட்டான சூழலில் எமக்கு வழிகாட்டுதல்கள் வழங்கிய, ஆறுதல் கூறிய, துணை நின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பணிந்து வணங்கி நன்றியுரைக்கிறோம்.

நன்றியுடன்.......
பாரத்... பாரதி....

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்