கூடங்குளம் போராட்டம் ஒரு 'அங்கிட்டு இங்கிட்டு' அதிரடி பார்வை



கூடங்குள அணு உலை திறந்தது சரிதான் என்கின்ற மனநிலைக்கு தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் வந்துவிட்ட நிலையில்,  தற்போது இடிந்தகரையில் சுமார் ஐயாயிரம் மக்களுடன் அணு உலை திறப்புக்கு எதிரானவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடத்து வருகிறது.

"தமிழக முதலமைச்சரை மட்டுமே நம்பியிருக்கிறோம்" - சமீபத்தில் முதல்வரை பார்த்து விட்டு வந்த பின்னர் கூடங்குள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் சொன்ன வார்த்தைகள் இது.

ஆனால் அரசியல்வாதிகளுக்கே உரிய ராஜதந்திரத்தோடு, அணு உலையை திறந்து விட்டார் ஜெயலலிதா. ஒருவேளை கலைஞர் முதல்வராக இருந்திருந்தாலும் கூட இதை தான் செய்திருப்பார். இருவரின் ராஜ(?!?)தந்திரங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக கூட தெரியவில்லை.

அணுசக்தியின் ஆக்கம் நாட்டின் நலனுக்கு மிக முக்கியம் என்று 'சாதா' விஞ்ஞானிகளும், 'அரசியல்' விஞ்ஞானிகளும் சொல்லி விட்ட நிலையில், தற்போது கூடன்குளத்தில், 8வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தை அரசும், ஒரு  சில பத்திரிக்கைகளும் கையாண்ட விதம் சரியா என்பதை ஆராய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

"அணு உலை ஆபத்தில்லை என்று சொல்பவர்கள் தங்கள் ஊரில் அணு உலையை அமைத்துகொள்ள முன் வருவார்களா?" என்ற அந்த பகுதி அப்பாவி மக்களின் ஐயம் அர்த்தமுள்ள கேள்வியாகவே தெரிகிறது.

தங்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்கின்ற சாமானிய மக்களின் ஐயத்தை நீக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?

ஆரம்பத்தில் போராட்டத்தை ஒடுக்க போராட்டத்திற்கு மதசாயம் பூச நினைத்தார்கள். இயலவில்லை.

அடுத்து போராட்டக்காரர்கள் வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலிகள் என்றார்கள்.

வெளிநாட்டு நிதியுதவியின் மூலமாக தான் இந்த மக்களின் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக சொன்ன அதே மத்திய (உளறல் துறை) இணை அமைச்சர் நாராயணசாமி.., சில நாட்களுக்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வந்தது பற்றி இது வரை நிரூபிக்க இயலவில்லை என்று மாநிலங்கவையிலேயே பல்டி அடித்தார்.

இந்த பருப்பு எல்லாம் வேகாமல் போனதால், இப்போது "நக்சலைட் பின்ணணி" என்ற பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்களத்தின் நந்திகிராம் கிராமத்தில், டாடா நானோ தொழிற்சாலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டம் நீண்ட நாள்களுக்கு இடைவெளியில்லாமல் நடந்ததற்கு நக்சலைட்கள் தான் காரணம்., அதே போன்று இடிந்தகரை மக்களுக்கு நக்சலைட்டுகள் பின் புலமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் அளவுக்கு நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்  என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்ளுமா?

அப்படியெனில் தமிழகத்தில் நக்சலைட்டுகளே இல்லை என்ற தமிழக காவல் துறையின் வாதம் பொய்யா?

இதில் தினமலரின் கடுமையான தாக்குதல் பிரச்சாரம் வேறு. உண்மையின் உரைக்கல் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், போராட்டக்காரர்களை "உதயகுமார் கும்பல்" சொல்லுவதும், தினமும் போராட்டக்காரகளைப் பற்றி  ஜோசியம் சொல்வதும், அபாண்டபழிகளை சுமத்துவதும்  நியாயமான முறையாகத்தெரியவில்லை.

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் பாணியில் இடிந்தகரையில் காவல்துறை குவிப்பு, ராதாபுரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு, வஜ்ரா போன்ற பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு போன்ற அத்துணை விஷயங்களையும் தாண்டி போராடிக்கொண்டிருக்கும் அந்த பகுதி மக்களின் வாழ்வாதார, ஜீவாதார பயத்தை நீக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அணு உலையை ஆதரிக்கும் மக்கள் கூட, அறவழியில் போராடும் மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளை கட்டாயம் கண்டிக்க வேண்டும்.

சில நாட்கள் மின்தடையால் வெப்பத்தில் புழுங்கியதற்கே, "ஐய்யோ அணு உலை தேவை" என கூக்குரலிட தொடங்கிய நமக்கு, வாழ்க்கைப்போராட்டத்தை, உயிர் வாழும் உரிமைக்காக போராடும் கிராம மக்களின் போராட்டத்தை கிண்டலடிக்க என்ன தகுதி இருக்கிறது?

5 கருத்துரைகள்:

Prabu Krishna said...

உண்மைதான், மக்கள் போராட்டத்தை திசை திருப்ப எத்தனை முயற்சிகள்?.

தொழிற்தேவைகளுக்கு மற்ற மின்சாரத்தை பயன்படுத்தி விட்டு, சூரிய ஒளியின் மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க இயலும். இங்கே அணு உலை என்பது தேவையே இல்லாத ஒன்று.

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லா வரிகளும் உண்மை...
அரசு நடிப்பில் ஆஸ்கார் வாங்கி விட்டது

சென்னை பித்தன் said...

நல்லா அலசியிருக்கீங்க.

Unknown said...

எல்லோரும் அவரவர் வீட்டில் மாடியில் சோலார் பேனல் பொருத்தி மின்சாரம் பெறலாம். அல்லது நிலம் கொடுத்து பணம் பெற்ற பாவத்திற்க்காக அந்த மக்களும் அணு கதிர் அபாயம் இல்லாத இடத்திற்க்கு இடம் பெயரலாம்.

ஆர்வா said...

கடைசி கேள்வி நச்.. ஆமாம் அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விகேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்