தேடல்- பாலகுமாரன் வரிகள். #ப.பி

“சனியும் ஞாயிறும் தலைமறைவாகும்- வேலை என்னும் ஒரு பூதம்’ என்று ஒரு தமிழ்க்கவிஞர் எழுதினார். மற்ற நாட்களில் வேலை என்றும், சனியும் ஞாயிறும் அந்த பூதம் தொல்லை கொடுக்காது என்றும் அந்த எண்ணத்தில் எழுதினார். எனக்கும் அந்த எண்ணம் இருந்தது.

ஆனால் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அந்த பூதத்தோடு கைகோர்த்துக் கொண்டு நான் உல்லாசமாக ஊர் சுற்றினேன்.

உல்லாசமாக ஊர் சுற்ற வேண்டுமென்றால் மற்ற நாட்களில் நாயாய் பேயாய் வேலை செய்ய வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒவ்வொரு பயணத்திலும் விதம்விதமான அனுபவங்கள் ஏற்பட்டன. எல்லாமும் கதை எழுதப் பயன்பட்டன. சரித்திர சம்பந்தமான உணர்வு அதிகரிக்க, தனித்திருத்தலே உதவி செய்தது. ஆன்மிக சம்பந்தமான உணர்வை அது அதிகரித்தது. மரணம் பற்றி சிந்திக்கும்போது எது நான் என்ற கேள்வியும் எழுந்தது. இவை எல்லாமும் கலந்துகட்டிய ஒரு குழப்பவாதியாக என் வாலிபப் பருவம் நகர்ந்தது. குழம்பியதே தெளியும் என்பது மகா வாக்கியம்.

மதங்கள் வேறு, கடவுள் தேடுதல் வேறு என்ற எண்ணம் பலப்பட்டது.

மிக ஆரம்பத்திலேயே நான் இந்த குழப்பத்திலிருந்து வெளிப்பட்டேன். எந்த மதமும் கிடையாது என்று சொல்வதைவிட, ஏதோ ஒரு மதத்தில் ஏதோ சில சடங்குகளைச் செய்துகொண்டு, அதைப்பற்றி அதிகம் விவாதிக்காது கடவுள் தேடுதலை ஒரு தனிமனித காரியமாக நான் வைத்துக்கொண்டேன். இது சில புத்தகங்களால் தெளிவாயிற்று. இந்து மதம் தவறே இல்லை. அது தெளிவாகப் பல விஷயங்களைச் சொல்கிறது. அதேபோலமற்ற மதங்களிலும் கடவுள் பற்றிய விஷயங்கள் தெளிவாக இருக்கக்கூடும். ஆனால் இப்போது மதத்தை முன்னின்று நடத்துபவரிடம் இது காணோம். இப்போது இருக்கின்ற உபதேசிகள் இதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

இடைஞ்சல் என்பது அலுவலகத்தின் மூலம் ஏற்பட்டது. கடும் சண்டையும் துரோகங்களும், ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுப்பதும் எளிதாக நடந்தன. ஒவ்வொருநாள் காலையும் அலுவலகத்தில் நுழையும்போது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினை என்ன என்பது ஒரு பெரும் கவலையைக் கொடுத்தது.

ஆனால் என் தாயார் அதற்கு விதிவிலக்காக இருந்தார். தமிழ்க்கவிதைகளை அவர் ரசிப்பதே தனி அழகாக இருந்தது. அதைச் சொல்லித் தருவது இன்னும் சுவையாக இருந்தது. கூரிய புத்தி படைத்தவராக, கலை இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவராக, ஒருவர் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்தவராக இருந்தார்.

“எப்பாடு பட்டாவது வீடு வாங்கிடு. இப்ப எல்லாத்தையும் செலவு பண்ணிடாதே” என்று என்னிடம் உரிமையாகப் பேசுவார். நான் வாய்விட்டு சிரிப்பேன். அவரும் கலந்துகொள்வார். “நமக்குன்னு ஒரு சொந்தவீடு எப்பதான் கிடைக்குமோ, அந்தமாதிரியெல்லாம் ஆசைப்படணும். வெறுமே புத்தகப்புழுவா இருக்காதே. உலகம் தெரிஞ்சுக்கோ” என்று சொல்ல, இளைஞன் புத்தகப் புழுவாக இருப்பதா அல்லது போக்கிரி உலகத்தோடு சண்டையிடுபவனாக இருப்பதா. எனக்குள் பெரும் குழப்பம் வந்தது.

-பாலகுமாரன்.

1 கருத்துரைகள்:

Nagendra Bharathi said...

அருமை

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்