ஊர் சுத்தலாம் வாங்க -பாரத் பாரதி

யாராவது ராகுல் ஜி யின் "ஊர் சுற்றிப்புராணம்" படிச்சியிருக்கீங்களா?

அது மாதிரி ஒரு பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து தான், எஸ்.ராமகிருஷ்ணன் "துணையெழுத்து" எழுதியதாகச் சொல்லுவார். மாற்றம் வேண்டும் என்பதற்காக , ஊர்சுத்திய அனுபவம் மட்டும் எழுதாமல், அங்க சந்தித்த "மாறுபட்ட மனிதர்களை" பற்றி எழுதியதாக சொல்லுவார்.

பயணம் என்பது எதை நோக்கியது?
ஊர் ஊராக நகர்வதா?
இல்லை மாறுபட்ட மனிதர்களை சந்திப்பதா?

எப்படியாயினும் எனக்கு தனித்திருப்பது எவ்வாறு  மிக பிடிக்குமோ , அப்படியே பயணிப்பதும் மிக விருப்பம்.

தனியொருவனாய், கட்டுப்பாடு ஏதும் இன்றி ,நாடோடியாய், தேசாந்திரியாய் சுற்றித்திரிய வேண்டும் என்பது இளமையின் தொடக்கத்தில் இருந்த பேராசை.இனி அதற்கு வாய்ப்பில்லை என நெற்றியில் அடித்து சொல்கிறது எதார்த்தம்.

உண்மையில் பயணித்துக்கொண்டே இருப்பவனுக்கு வீடு சிறை. நண்பர்களின் வீடுகளில் தங்கி, தங்கி மூன்று மாதம் கழித்து, வீடு திரும்பல் நடந்தது ஒரு  பொற்காலத்தில்,

தங்கும் வசதி, உணவு, உடை இதெல்லாம் ஒரு பொருட்டாய் தெரிந்ததில்லை அப்போது.

இருப்பதை வைத்து இயல்பாய் நகர்ந்து விட முடிந்தது அப்பொழுதெல்லாம்.

இப்பொழுது கூட ஒரு பயணத்தில் தான் இருக்கிறேன்.

 வாழ்க்கைத்துணை அமைவதை விட அதிக அதிர்ஷடம் தேவைப்படுகிறது பயணத்தின் போதான வழித்துணை அமைவதற்கு.

"யார் வந்து உட்காரப்போறங்க" அப்படிங்கிறது தான் சில பயணங்களின் ஆரம்ப த்ரில்.

பொருத்தம் இல்லைனா அவங்க மனநிலைக்கு ஏத்தமாதிரி , நம்மையும் தகவமைச்சுகிட வேண்டியது தான். சில சமயம் நம்ம அலைவரிசையில் இருப்பவர்களும் கிடைப்பாங்க. சட்டென்று வளவள குறைத்து கேட்க ஆரம்பித்துவிடுவேன் எனக்கு கேட்டுக்கொள்ளுதல் ரொம்ப பிடிக்கும். "கொளுத்தி போட்டு'' விட்டு , கேட்க தயாராய் உட்கார்ந்துக்கொள்ள வேண்டியது.

சில சமயம் பேசவே பிடிக்காது. அப்புறம் என்ன, தூங்கற மாதிரி நடிக்க வேண்டியது தான்.

பகல் நேர பயணத்துக்கும், இரவு நேர பயணத்துக்கும் வேறுபட்ட முகங்கள்.

"என்ன ஊர் இது" என தெரிந்து கொள்ளுவதற்காக , ஒவ்வொரு நிறுத்தத்திலும் மெர்குரி வெளிச்சதில் கடைகளின் பெயர் பலகையினை விடிய விடிய விழித்திருந்து பார்ப்பது, தேடலின் ரசனையான புதுவகை.

பகல் நேர பயணத்தின்  நிறம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

வித விதமான மனிதர்கள் . அவர்தம் மாறுபட்ட மனநிலைகள்...கலவையான சூழ்நிலை சூழ்ந்திருப்பது பகல் நேர பயணம்.

எது, எப்படியாகினும் , எப்படா வீடு திரும்புவோம் என்ற எண்ணமும், என்ன இருந்தாலும் நம்ம வீடு மாதிரி வருமா என்று இப்பொழுதெல்லாம் தோணுகிறது என்பது தான் எதார்த்தம்.( வயசாயிடுச்சோ?)

அது சரி.,
உங்களுக்கு பயணம் பிடிக்குமா?

-பாரத்...பாரதி.

0 கருத்துரைகள்:

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்