கந்தப்புராணம் படிச்சிருக்கீங்களா? அட இல்லாட்டி பரவாயில்லைங்க, கந்தன் கருணை படம் பாத்திருக்கீங்களா?
அதுல கந்தன் தன் வெற்றிவேல் கொண்டு தாக்கி, சூரபத்மனை வதம் செய்த பின், கடைசியில் மனம் திருந்தும் அந்த அசுரன் மன்னிப்பு கேட்கிறான். (கவனிக்க, சில வில்லன்கள் கிளைமாக்சில் கூட திருந்துவதில்லை)
பின்னர் கந்தன் அடியவர்கள் தன்னையும் வணங்க வேண்டும் என்று வரம் வாங்குகிறான். மயிலாகவும், சேவலாகவும் பிரிகையடைகிறான் சூரபத்மன்.
இது ரொம்ப இழுவையா இருக்கு அப்படினு நினைக்குறவங்களுக்காக,
வேல் -------> சூரபத்மன் ------------> மயில் + சேவல் + ரொம்ப ரத்தம்.
இந்த கதையை அப்படியே உல்டா பண்ணுங்க, அது தான் அணுக்கரு உலையில் நடைப்பெறும் அணுக்கரு பிளவை வினை. (Nuclear fission)
நியூட்ரான் கொண்டு, யுரோனியத்தை தாக்கும் போது, அது பிளவுற்று,
பேரியம், கிரிப்டானாக பிளவுறும் நிகழ்ச்சியே அணுக்கரு பிளவையாகும்.
அதனுடன் மூன்று வேகநியூட்ரான்களும், அதிக அளவிலான ஆற்றலும் வெளியாகும்.
இந்த வினையின் போது உண்டாகும் 200 MeV ஆற்றலை பெறவே அணுக்கருவினை நிகழ்த்தப்படுகிறது. (வினையின் போது வெளியாகும் கதிர்வீச்சுக்கள் தான் அபயமானவை)
அணுக்கரு பிளவையில் வெளியாகும் வேகநியூட்ரான்களை கட்டுப்படுத்தாமல் விட்டால், தொடர்ச்சியாக வினை நடந்துகொண்டே இருக்கும், இதனை தொடர்வினை என்கிறார்கள். (Chain Reaction)
இந்த அணுக்கரு பிளவுவினையை கட்டுப்பாடான முறையில் நடத்தும் அமைப்பு தான், அணுக்கரு உலை(Nuclear Reactor) எனப்படுகிறது. வினையின் போது உண்டாகும் அதிக அளவு வெப்பத்தை குறைக்க சாதாரண நீர், கனநீர் மற்றும் திரவ சோடியம் ஆகியன குளிர்விப்பான்(The Cooling System) என்னும் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த குளிரூட்டும் திரவம் அணுக்கரு உலைகளில் இருந்து வெளியேறி விட்டது தான் ஜப்பானில் ஏற்பட்ட பிரச்சனையாகும்.
ஜப்பானின் புக்குஷிமா அணுமின் தயாரிப்பு நிலையத்தில் உள்ள ஆறு
அணுமின் உலைகள் உள்ளன. சுனாமி தாக்கியபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கத்தின் போது, 3 உலைகளில் உள்ள
குளிரூட்டும் அமைப்புக்கள் செயலிழந்ததால்தான் அவற்றின் வெப்பம் மிக அதிகரித்து உலைகள் வெடித்துள்ளன.
அந்த உலைகளின் உட்புறத்தில், அணுக்கரு பிளவைக்கு தேவையான மூலப்பொருட்களான சீசியம் - 137 மற்றும் அயோடின்- 131 ஆகிய தனிமங்கள் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
வெடிவிபத்தின் போது அணுக்கழிவு கலந்த நீர் வெளியேறியிருப்பதும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானில் 2007ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷிவசாகி - கரிவா அணுமின் நிலையத்தில் இதேபோன்று திரவக்கசிவு ஏற்பட்டு அது கடலில் கலந்ததால் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. இப்போதும் மக்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படாது என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உதிரிப்பூக்கள் :
ஜப்பான் அணுக்கரு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீரை பயன்படுத்துவது ஆபத்தானது என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அணுக்கரு உலையில், மூலப்பொருள் எனப்படும் பிளவைக்கு உட்படும் கனமான தனிமம் (Fuel )வெளியேறினால் அது பேரழிவை உண்டாக்கும்.
அணு உலை நிறுத்தப்பட்டாலும் அணு மூலப்பொருளிலிருந்து வெளியாகும் வெப்பம் 5 சதவீதம் வரை இருந்துக்கொண்டே தான் இருக்கும். இதிலிருந்து வெளியேறும் காமா கதிர்கள் தான் தலைமுறைகளையும் தாண்டி பாதிப்பை உண்டாகும் தன்மையுடையது.
1986-ல் உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்த
சம்பவத்திலும், 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்ஸ்சில்வேனியா மாகாணத்தின் இருந்த மூன்று அணுக்கரு உலைகளில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திலும் அணு உலையின் மூலப்பகுதி வெப்பமடைந்து வெடித்ததால் அவை பெருத்த பாதிப்பை ஏற்படுத்தின.
செர்னோபில் அணு உலையின் பாதுகாப்பு சுவர்களை விட, ஜப்பானின் அணுக்கரு உலைகளின் பாதுகாப்பு சுவர்கள் வலுவானதாக கருதப்படுகிறது. (சாதாரணமாக பாதுகாப்பு சுவர்கள் இரண்டு முதல் இரண்டரை மீட்டர் நீள கான்கிரீட் சுவராக இருக்கும்)
2441 டன் நிலக்கரியை எரித்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை வெறும் 1 கிலோகிராம் யுரோனியத்தை அணுக்கருபிளவைக்கு உட்படுத்தி பெறமுடியும். மற்ற ஆற்றல் மூலங்களை விட, அதிக பயனை தருவதால், இனி வரும் நாட்களில் அணுக்கரு உலை என்பது தவிர்க்க இயலாததுதான்.
ஜப்பானின் புக்குஷிமா அணுமின் தயாரிப்பு நிலையத்தைச் சுற்றி உள்ள 1.70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் வட கடலோர மாநிலங்களில் சுனாமி காரணமாக ஏற்பட்ட இழப்பு இந்திய மதிப்பில் 9 லட்சம் கோடி என மதிப்பிடப்படுள்ளது.
(ஸ்பெக்டரம் தொகை சட்டென்று உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. வேண்டுமெனில் சாதாரண நீர் அல்லது நீர் மோரை வெப்பம் தணிக்கும் திரவமாக பயன்படுத்திக்கொள்ளலாம்)
இந்தியாவில் 20 அணு உலைகள் இயங்குகின்றன, அதில் தாராப்பூரில் உள்ள 2 உலைகள் ஜப்பான் தொழில்நுட்பத்தில் இயங்குபவை. (ஜப்பானில் 53 அணு உலைகள் உள்ளன)
அண்மைச்செய்தி:
ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் பெரும் தீ ஏற்பட்டுள்ளதால், அது எந்நேரமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிஸ்கி :
கந்தன் கருணை என்பது அணுக்கரு பிளவையை எளிமையாக விளக்கும் முயற்சி மட்டுமே. ஆத்திகம், நாத்திகம் பேசிக்கொண்டு யாரும் பின்னூட்டகளத்தில், அணுகுண்டு வெடிப்பு நிகழ்த்த வேண்டாம்.
*****************************************************************************
முந்தைய அறிவியல் முயற்சிகள் :

















