நீயும் நானும் - நானும் நீயும் - தமிழ்த்தேனீயின் கவிதை.



காணும் இடத்தில் இல்லை
கற்சிலைகளிலும் இல்லை
வானும் பூமியும்
வலம் வந்தாலும்
தென்படுவதொன்றுமில்லை
கடவுள் என்ற ஒன்று!

உலகின் வல்லமை ஆயுதமா?
உணர்வீர் தோழர்களே...

உலகையே ஆளும் வல்லமை
சர்வ நிச்சயமாய்
அன்பே தான்! உயர் அன்பே தான்!

செல்வத்தை வாரிக்கொடுப்பதால்
மட்டும் வள்ளல் அல்லவே!
கள்ளமில்லா அன்புதனை
அள்ளிக் கொடுப்பவரும்
வள்ளல் அல்லவோ?

இருப்பதைக் கொடுத்து
இதயத்தைத் தெரிவிப்போம்!

அன்பால் அனைவரும்
வள்ளல்கள் தாம்.
அன்பு காட்டி
கடவுளை காண்பிப்போம்.
நம்முள்ளே..
நமக்குள்ளே!

 -கவிதையாக்கம்.
  தமிழ்த்தேனீ.

விஜயகாந்துக்கு மங்குனி அமைச்சரின் கலாட்டா ஆலோசனை...



கேப்புடன் அவர்களே என்ன திகைச்சுப்போய் நின்னூட்டீங்க."தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னாடி, இந்த ஜெயலலிதா மம்மி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுட்டாங்க. அதுவும் அத்தனை தொகுதிக்கும் சேர்த்து அப்படி"னு கிர்ர்ரடித்து இருக்கீங்களா?

அங்க பாருங்க... போன தேர்தலை புறக்கணிச்ச வைகோ-கூட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டாரு... நீங்க என்ன பண்றதா உத்தேசம்?

"அன்புச்சகோதரி-னு நினைச்ச அம்மா மதிக்கல" அப்படினு சொல்லிட்டு, கலைஞர் வாழ்க கோஷம் போட முடிவு பண்ணி, மஞ்சத்துண்ட போட கிளம்பிறாதீங்க. அப்புறம் உங்கள கறுப்பு எம்ஜிஆர்-னு மக்கள் சொல்லமாட்டாங்க. "கறுப்பு ராமதாஸ்"-னு தான் கூப்பிடுவாங்க. அந்த தமிழ்க்குடிதாங்கி தான், அம்மா திண்ணை இல்லைனா அய்யா திண்ணைனு  விலாசத்தை டக்குனு மாத்திடுவாரு.

திமுக-காரங்க எல்லாம் மங்காத்தா பாணியில் உள்ளே- வெளியே ஆடிகிட்டு இருக்கிறதாலே, எல்லா தொகுதியிலையும் உங்களையே நிறுத்தி, உங்கள காமெடி பீஸா மாத்திடுவாங்க.(போன தேர்தலில் வல்லரசா இருந்த உங்கள, இந்த தேர்தலுக்கு வடிவேலு ரேஞ்சுக்கு மாத்தியிடுவாங்க)

அப்புறம் அவுங்க சொன்னாங்க- இவுங்க சொன்னாங்க-னு னு காங்கிரஸ் பின்னாடி போயிடாதீங்க. அப்புறம் "கூடாநட்பு - அத்தியாயம் இரண்டு" உங்கள வெச்சு நடந்திடும்.
காங்கிரஸ்காரங்க சண்டையில கிழியாத சட்டை இதுவரைக்கும் கண்டுபுடிக்கவே இல்லைங்கிறதால, உங்க சட்டையை இழுத்து விளையாட பாக்குறாங்க.(சீமான் வேற காத்துகிட்டு இருக்காரு)

அந்த ஈவி"கேஸ்" பேச்சை நம்பி போனா அப்புறம் ரணகளம் தான். அவருக்கு யாராவதை உசுப்பேத்தி, அப்புறம் தேரை இழுத்து தெருவுல உடுற விளையாட்டு ரொம்ப புடிக்குங்க.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா "கறுப்பு சிரஞ்சீவி"னு பெயர் வாங்க மட்டுமே முடியும். நல்லா யோசிச்சு பாருங்க. உங்க தம்பி விசய் கூட அவமானப்பட்டு திரும்ப அம்மாகிட்ட வந்து, அணிலா மாறிட்டாரு.

அதனால வேக,வேகமா தனியா நிக்கப்போறேன்னு வீறாப்பா கிளம்பிடாதீங்க. யாவாரத்துல லாபம் பாக்குற சமயத்துல மறுபடியும் ஆரம்பத்துல இருந்து வர உங்க ஆளுக யாருக்கும் விருப்பமும் இல்லை. தெம்பும் இல்லை.(முன் ஜா"மீன்" இப்போது விற்கப்படுவது இல்லை)

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரை, மாநிலத்தில் ஆளும்கட்சிதான் பெரும்பாலான இடங்களில் ஜெயிக்கும் என்பது எழுதப்படாத விதி.(இந்த விதி மாநில தேர்தல் "கமிஷனின்" அங்கீகாரம் பெற்றது)

அங்கொரு கட்சியும், இங்கொரு கட்சியும் இருந்தால் அந்த உள்ளாட்சித்தலைவர் தூக்கப்படுவார் அல்லது தாக்கப்படுவார் என்பது உலகமறிந்த உண்மையோ உண்மை.

அதனால மானம் மாரியாத்தா..,வெட்கம் வேலாயுதம்.., சூடு சூலாயுதம் எல்லாத்தையும் கழட்டி வைச்சுட்டு., அம்மா கொடுக்குற சீட்டை வாங்குங்க.

மாநகராட்சியோ, நகராட்சியோ அம்மா கொடுக்கிற சீட்டு என்பது சீட்டு கணக்கு அல்ல. பதவி கணக்கு. நிச்சயம் ஜெயிப்பீர்கள்.

ஜெயிச்ச பிறகு வேணா கொஞ்சம் தெம்பா அம்மா கூட "கலாட்டா அரசியல்" நடத்தி பார்க்கலாம். அம்மா பயந்தா தொடரலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கான் நம்ம வாசிம்கான்.(இப்ராஹிம் ராவுத்தர் துணை)

ஆனா கடைசி வரைக்கும் அம்மா கூட இருந்தா ஆப்பு தான். அடுத்த "கறுப்பு வைகோ" நீங்கதான்.

சினிமாவுல சுழண்டு, சுழண்டு சுனாமி மாதிரி, கால் விளையாடு காட்டுற உங்கள இந்த மாதிரி தலைக்கவுந்து பாக்குறதுக்கு சங்கடமா இருந்துச்சுங்க.

அதுதான் நம்ம மூளைக்கு எட்டின மாதிரி ஆலோசனை சொல்லவந்தேங்க.

டிஸ்கி:

கறுப்பு நிலா நீதான் கலக்குவதேன்... துளித்துளியாய் கண்ணீர் விழுவது ஏன்?
இந்த விஜயகாந்த் பட பாடலை பதிவின் பொருத்தமான இடத்தில் பொருத்திக்கொள்ளவும்.

அம்மா என்னும் உலகமொழி - தமிழ்த்தேனீயின் கவிதை.



அம்மா...
ஐந்தறிவு ஜீவன்களும்
கூட
உச்சரிக்கும்
ஒரு உலகமொழி!

அம்மா..
உலகத்தை
அறிமுகப்படுத்தி
உலவவிட்டவள்!

அம்மா...
அன்பின் அர்த்தம்
எளிதில் புரிகிற இனிய மொழி
பேசிப்பார்த்தவர்களுக்கு மட்டும்!

அம்மா...
கருவறைக்குச்
சொந்தக்காரி..
அன்புள்ளங்களை மட்டும்
பெற்றெடுக்கும்
அதிசியக்காரி..

அம்மா...
நடமாடும் கடவுளுக்கு
நாம் சொல்வோம்
என்றென்றும் நன்றி..

 -கவிதையாக்கம்.
   தமிழ்த்தேனீ.  

மோடி வித்தை பலிக்குமா? அசால்ட்டு ஆறுமுகத்தின் அதிரடி அலசல்.



அதிரடி அரசியலில் தற்சமயம் சோனியா ஒதுங்கியிருக்கும் சூழ்நிலையில், தற்போதைய தேசிய அரசியலில் மிகப்பெரிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் பலவீனமான நிலையிலேயே இருக்கிறது.

செயலற்ற பிரதமர் என்று மன்மோகனை சாடினாலும், பாஜக தலைமையும் அந்த செயலற்ற பிரதமரை கூட; சமாளித்து அரசியல் செய்யத்தெரியாமல் பிரதான "சொதப்பல் எதிர்கட்சியாக" கலங்கி வருகிறது.
 
அத்வானிக்கு போட்டியாக நரேந்திர மோடி - நரேந்திர மோடிக்கு போட்டி அத்வானி - நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவு என்பது தான் பாரதீய ஜனதாவின் நேற்று - இன்று - நாளை- நிலவரமாக இருக்கிறது.

இப்பொதெல்லாம் அத்வானி, நரேந்திர மோடிக்கு நேரடியாகவே, ஆதரவு தெரிவித்து வருகிறார். தனது ரத யாத்திரை தேரின் அச்சு முறிந்து, நடுத்தெருவில் நின்று விட்டதால் கூட இந்த முடிவுக்கு அத்வானி வந்திருக்ககூடும்.

"மோடி, அமெரிக்கா செல்ல திட்டமிட்ட நிலையிலேயே , மோடிக்கு விசாவை மறுத்தது ஏன்? அதுவும் மோடி விசாவுக்கு விண்ணப்பிக்காத போது?"  அமெரிக்க அண்ணனுக்கு அத்வானி கேள்வி எழுப்பி இருக்கிறார். 2002 குஜராத் கலவரத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை மோடியை விட,  அதிகமான சந்தோஷமாக வரவேற்று இருக்கிறார்.

தனது பிரதமர் கனவினை அத்வானி குழி தோண்டி புதைத்துவிட்டு, இனி துணைப்பிரதமர் அளவுக்கு சிந்திக்க தயாராகி விட்டார் போல.

நெடுஞ்செழியன், அன்பழகன், ஓ.பன்னீர் செல்வம் போன்ற ரேஞ்சில் மிஸ்டர் இரண்டாம் இடமாக, இனி தேசிய அரசியலில், அத்வானி பளப்பளக்க இருக்கிறார்.

நடுநிலை அரசியல் விமர்சகர்களை பொறுத்தவரை இந்த மாற்றத்தினை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணமே உண்டாகியிருக்கிறது.

அத்வானியை விடுத்து, தாம் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் போது, தன் முகத்தில் இருக்கும் "குஜராத் கலவர கறை"  நீக்கப்படிருக்க வேண்டும் என்பது தான் நரேந்திர மோடியின் தற்போதைய ஆசை.

அதனால் தான் தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பை, இறுதி தீர்ப்பைப் போல காட்ட துடிக்கிறார். அதற்காகவே, தன் மூன்று நாள் உண்ணாவிரதத்தில் முஸ்லீம்கள் பங்கேற்பதை அதிக அளவில் விளம்பரப்படுத்தி இருக்கிறார்.

மோடி தன்னுடைய வித்தையால் தான்; நிலநடுக்கம், கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குஜராத்தை மீட்டெடுத்தார் என்ற தரப்பை பிரபலப்படுத்தவும் இந்த மூன்று நாள் உண்ணாவிரதத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளார் மோடி.(இதே போல, இந்தியாவையும் மாற்றுவார் என்று மக்கள் நம்ப வைப்பது தான் மோடியின் அடிப்படை சூத்திரம்)

தேசிய அரசியலில் தனது தாக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெயலலிதாவின் ஆதரவையும், தனது சொந்த கட்சிகாரர்களின் ஈர்ப்பையும், பெற்றியிருப்பது மட்டுமே மோடியின் தற்போதைய வெற்றி. (ஒரு வேளை பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடிக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது, ஏதெனும் ஒரு சூழலில் மோடி, தன்னை ஆதரிப்பார் என்பது ஜெயலலிதாவின் மனக்கணக்காக இருக்கக்கூடும்)

ஆனால் தனது உண்ணாவிரததால்,  அன்னா ஹசாரே அளவுக்கு மீடியாக்களின் பளபளப்பிலும்,  மக்கள் மனதிலும் இடம் பிடித்து விடலாம் என்ற மோடியின் எண்ணம் முழுமையாக நிறைவேறவில்லை என்பது தான் தற்போதைய நிலவரம்.

டிஸ்கி:
தொடர்ந்து ஊழல், குண்டுவெடிப்பு, பொருளாதார சிக்கல், விலைவாசி உயர்வால் கோபமாகியிருக்கும் மக்கள், தமிழக மக்கள் ஸ்டைலில் "மாற்றம் வேண்டும்" என்று ஆளுங்கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் எனில் எதிர்தரப்பில் நிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு யோகம் அடிக்கும் ஆபத்து இருப்பதையும் மறுத்து விட முடியாது.

கத்துக்குட்டிகளின்அட்டகாசம்-1. துஷ்யந்தி,நிவேதா,காவியப்பிரியா.




இயந்திர வாழ்க்கை - துஷ்யந்தி.

உழைத்து வாழ்பவன் மனிதன்,
பிறர் ஆணையிட வாழ்பவன் இயந்திரம்,

ரசித்து வாழ்பவன் மனிதன்,
ரசனையைத் தொலைத்து இயங்குவது இயந்திரன்,

சோர்ந்து, மீண்டும் கிளர்வது மனிதன்,
சோர்வுறாமல் சொன்ன வேலையைச் செய்வது இயந்திரம்,

பணம் சம்பாதிப்பதாற்காக இயந்திரமாய்
மாறிக்கொண்டு இருக்கும் மனிதா...
கொஞ்சம் ரசனையோடு இளைப்பாறு..,

ஆறாம் அறிவு எனபது பணம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல..

  - துஷ்யந்தி
   (பதினொன்றாம் வகுப்பு மாணவி)

இன்றைய ஸ்டார்:

"இன்னிக்கு பெரியார் பிறந்த நாள். சாக்லேட் எடுத்துக்குங்க..." என தனக்கு பிடித்த பெரியாருக்காக எமக்கு இனிப்பு வழங்கிய
நிவேதா. சி (பன்னிரெண்டாம் வகுப்பு)


வெற்றி.
பயத்தை செலவளித்தால் பலம் வரவு.
வேகத்தை செலவளித்தால் விவேகம் வரவு.
கோபத்தை செலவளித்தால் கோலாகலம் வரவு.
தோல்வியை செலவளித்தால் வெற்றி வரவு.
  -காவியப்பிரியா.ர.

இங்கிருந்தும் உருவாகட்டும் பல பில்கேட்ஸ்கள்...



ஒரு விஷயத்தை, முதிர்ந்த வயதில் கற்றுக்கொள்ளும் போது வரும் பயமும், படபடப்பும் சின்னஞ்சிறு வயதில் இருக்காது என்பதால், "பயமறியாத இளங்கன்றுகள்" கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை இப்போது பழகுவதற்கும், சின்ன வயதில் பழகுவதற்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது?

இளம் வயதில் உங்கள் வீட்டில் கார் இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் மிக விரைவாக, எளிதாக கார் ஓட்ட பழகி இருப்பீர்கள். (மிக குறைந்த சேதாரங்களோடு....)

அது மாதிரி, இந்த கால பள்ளிக்குழந்தைகளுக்கு சின்னஞ்சிறு வயதில் கணிணியை "நோண்டி" பார்க்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தால்.

கணிணிச் சார்ந்த மிகப்பெரிய விஷயங்களை அவர்கள் இப்போதே பழக போவதில்லை என்றாலும் கூட, கையாளும் அளவிற்காவது இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இலவசமாக கொடுப்பதால், "கம்பியூட்டர் என்ற பெயரில் பெரிய சைஸ் கால்குலேட்டர் தான் குடுப்பாங்க" அப்படி-னு சொன்னது பொய்யாக மாறுமளவிற்கு தமிழக அரசு மிக கவனமாக, மடிக்கணிணி தரும் நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்பந்தம் தந்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது.

இனி வரும் காலம் கணிணியின் காலம் என்பது, எப்போதோ முடிவாகி விட்ட சூழ்நிலையில், நமது பள்ளி மாணவர்களும் குறைந்தபட்சம் விளையாட்டுத்தனம் என்ற அளவிலாவது கணிணியை கையாள வாய்ப்பு கிடைத்திருப்பது, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று வீட்டுப்பாடங்களை கண்ணியில் செய்து வரும் அளவுக்கு இப்போதைய நிலை மாறும்.

தற்போதைய சூழ்நிலையில் பில்கேட்ஸின் மைக்ரோசப்ட் நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து "பொட்டி தட்டும்" பணிகளிலும் இந்தியர்கள் தான் அதிகம் கலக்குகிறார்கள் என்ற சூழ்நிலை மாறி, தமிழர்கள் கை கணிணி துறையில் ஓங்க, இந்த இலவச மடிக்கண்ணி வழிவகுக்கும். யார் கண்டது பில் கேட்ஸ் கூட, ஒரு தமிழக மாணவனுக்கு சலாம் வைக்கும் நிலை உண்டாகும் வகையில், நம் தமிழகத்திலிருந்தும் பல பில்கேட்ஸ்கள் உருவாகி, உலகை வலம் வரலாம்.

டிஸ்கி:

இலவசங்கள் கொடுப்பது சரியா தவறா?, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க இருக்கும் லாப நஷ்டங்கள் என்பதை தாண்டி, எளிய மக்களின், மகன் மகளுக்கு கணிணியை கையாள கிடைத்திருக்கும் மகிழ்ச்சியே இந்த பதிவின் அடிப்படை.
 
கணிணி மூலம் இணையத்தினை தவறாக பயன்படுத்துவார்களே என்ற கவலையும் உண்மைதான். ஆனால் இந்த விஷயங்களில் சரியான வழிகாட்டுதலை வழங்க முடிந்தால், நிச்சயம் இனியெல்லாம் சுகமே.(விரைவில் வலைப்பூக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்பது நமக்கான இப்போதைய சந்தோஷம்... பதிவுக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமே..)

தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கான அழைப்பு

உன்னால் முடியும்..உன்னால் முடியும்...முன்னால்.., முன்னால்...



முஸ்கி:
ஒரு காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மூன்றாவதாக வைத்து, தொழுதல் செய்யப்பட்டவர்கள், இன்று "தொழில் செய்பவர்கள்" என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதன் காரணத்தையும், அதனை சரி செய்வதற்காக காரியங்களையும் ஆராயும் வகையில்இந்த பதிவில் இருக்கும் கேள்விகள்/ கருத்துக்கள் தொகுக்கப்பட்டது.

இதற்கான பதில்களை "எதிர் பதிவாக" எதிர்பார்க்கிறோம். (எம்பூட்டு நாளைக்குத் தான் தொடர் பதிவு எழுத சகபதிவர்களை அழைப்பது...., இது எதிர்பதிவுக்கான அழைப்பு.. தில் இருந்தால் ஒரு சில ஆ"சிறியர்கள்" பற்றிய இந்த விமர்சனங்களுக்கு, பதில்... இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை, செயலில் காட்டுங்கள்)
கலகம் நன்மையில் முடியட்டும்.

 "மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?

அது என்ன அப்படி ஒரு கொடூர சந்தோஷம்... கேம்ஸ் பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்துவதாக "படம்" காட்டுவதில்..

கரும்பலகைக்கு முன் நின்று கொண்டு, ஏன் உளறிக்கொட்டுகிறீர்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறீர்கள்...ஹா..ஹா.. நாங்கள் எந்திரன் யுகத்து மாணவர்கள். (இலவச லேப்டாப் தரட்டும், இணையத்திலிருந்து, புதியதகவல்களை சேகரித்து, உங்களை "பெண்டு நிமித்தும் படலம்" நடத்தப்போகிறோம்.. அப்போது இருக்கிறது வேடிக்கை.

ஆ..ஊ.. என்றால் "நாங்கெல்லாம் அந்த காலத்துல.." என்று கதையளக்கிறீர்கள்.. ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தகுதியை சோதிக்கும் வண்ணம் தேர்வு வைக்கச் சொல்லலாமா? அதுவும் இப்போது மாணவர்களுக்கு நடத்திக்கொண்டிருக்கும் பாடப்பகுதியில்?(டீலா நோ டீலா?)

எப்போது சமச்சீர் வகுப்பறை கிடைக்கும் எங்களுக்கு? எப்ப பாத்தாலும், நல்லா படிக்கிறங்களுக்கே "காவடி" தூக்கிட்டு, எங்களை "காவு" கொடுக்க பாக்குறீங்க... எங்களுக்கும் மனசுனு ஒண்ணு இருக்கு..

பட்டாம்பூச்சியை புடிச்சு, இறக்கைகளில் ஆணியடித்து, மனசுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துறீங்களே நியாயமா? புத்தகத்தில் இருப்பதை வெறுமனே படித்து காட்டுவதற்கு எதுக்கு ஆசிரியர்? (அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூடத்தான் நல்லாசிரியர்கள்)

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க... லட்சியதுக்காக ஓடுபவர்களை, வெறும் சம்பளத்திற்காக ஓடுபவர்கள் ஜெயித்துவிட முடியாது. லட்சியத்திற்காக பாடம் சொல்லித்தரும் சக ஆசிரியர்களை கிண்டலடிக்கிறீங்களே நியாயமா? (எப்படியாவது அவர்களை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிடுவதில் காட்டும் புத்திசாலித்தனத்தை, எப்படி அவர்களை விட அதிகம் சாதிப்பது என்பதில் காட்டலாமே?)
காலங்காலமா இந்த சுள்ளான்னுக தொல்லை தாங்க முடியலையே

ஒரு இயந்திரத்தின், இதயத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைந்து, பாகம் குறிக்கும் பக்குவம் கூட எங்கள் இதய உணர்வுகளை புரிந்து கொள்வதில் காட்டவில்லையே ஏன்? (படிப்பு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்லவே)

காலையில, முதல் பாட வகுப்பில் கூட.. மனசுல முதலமைச்சர் மாதிரி-னு நெனைச்சுக்கிட்டு, உட்கார்ந்தே பாடம் நடத்துறீங்களே அடுக்குமா? (முதலமைச்சர் கூட நின்னூட்டு தான் பேசுறாங்க... ஆட்சி மாறியிடுச்சு.. தெரியுமில்ல)

புரியவைப்பதை விட்டுவிட்டு, "மக்கப்" செய்வதை தூண்டுகிறீர்களே நியாயமா?(அது சரி... தனக்கு புரிஞ்சா தானே, அடுத்தவங்களுக்கு புரிய வைக்க...)

நாகரீகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுறீங்க... ஆனா ஸ்கூல் முடிஞ்ச உடனே புள்ளைங்களுக்கு முன்னாடி நீங்க தான் ஓடுறீங்க...(மனசுல ஸ்கூல் பர்ஸ்ட்-னு நினைப்பு...)

கடைசியா ஒரு கேள்வி....வீட்டிலாவது சிரிப்பீங்களா? இல்ல இதே மாதிரி டெரர்தானா?

டிஸ்கி:
இந்த பதிவிலுள்ள கேள்விகள் அர்த்தமற்றவைகள் என்று நீங்கள் நினைத்தால், உலகில் மிகச்சிறந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம். குருதேவோ பவ... 

பஸ்கி:
"தில்" என்றால் ஹிந்தியில் அன்பு என்றார்கள். அன்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் என்பது தான் தலைப்புக்கான கோனார் உரை....எப்பூடி...

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்