கலைஞரின் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி & வடிவேலு - ஒரு அதிரடி கலாய்ப்பு ரிப்போர்ட்.


அரசியலில் ஒருவர் எதிரியாகி விட்டார் என்றால் அவரை கண்டு கொள்ளாமல் விடுவது அல்லது ஆட்டோ அல்லது கஞ்சா கேஸ் வரை  கட்டம் கட்டுவது ஜெயலலிதாவின் ராஜதந்திரம். ஆனால் எதிரியை உறவாடியே செயல்படவிடாமல் மொன்னையாக மாற்றுவது கருணாநிதியின் ராஜ தந்திரம். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது

கருணாநிதியின் டைரிக்குறிப்பில் நேற்று திரைப்படத்துறை போல, தொடர்ந்து மூன்று சினிமா சம்பந்தப்பட விஷயங்களில் செய்தியாகியிருக்கிறார்.(சினிமா பற்றிய அறிக்கை, வடிவேலு, ரஜினியுடன் சந்திப்பு)
                                       

இந்த தேர்தலில் ரஜினி, ஊடக வெளிச்சத்தோடு இரட்டைஇலைக்கு வாக்களித்திருந்தாலும், ராணா படப்பிடிப்பிலிருந்து மருத்துவமனையில் சேர்ந்த ரஜினியை வீல் சேரில் ஓடோடி சென்று பார்த்திருக்கிறார் கருணாநிதி. ரஜினிக்கு மூச்சுத்திணறல் என்று ஆரம்பத்தில் செய்திகள் பரவினாலும் பின்னர் லதா ரஜினிகாந்த் வெறும் அஜீரணக்கோளாறு தான் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது "மாற்றம்" வேண்டி ரஜினி வாக்களித்திருந்த போதும், ரஜினியின்  வெளியிலிருந்து"அரசியல்" என்னும் நிலைக்கு மாற்றம் வரக்கூடாது, தன் காலத்தில் மட்டுமல தன் பேரப்பிள்ளைகளின் காலத்தில்(???) கூட ரஜினி இடைஞ்சல் பண்ணாத அளவுக்குத்தான் கலைஞரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 
 
இப்போது ரஜினி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார், கருணாநிதி ரஜினியை சந்தித்த செய்தி இன்னும் வீடு திரும்பாமலே தமிழக வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இது தான் கலைஞரின் தீவிர சிகிச்சை கைங்கர்யம்.
                                                          

கையை காலா நினைக்கும் வடிவேலு, ரஜினியின் ராணா இல்லை கானாவிலிருந்து என்னை தூக்கினாலும் கவலையில்லை என்று தன்னைத்தானே உஷார் படுத்தியிருக்கிறார். திமுக கூட்டணிக்கு இருநூறு இடத்திற்கு மேல் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதுபோல இது தேர்தலுக்கு பிந்தைய பிரச்சாரம். வடிவேலுவுக்கு அழகிரி கொடுத்த அசைன்மெண்ட் இன்னும் முடியவில்லை என்று என்பதையே இது காட்டுகிறது.

ஸ்பெக்ட்ரம் கலவர காட்சிகள், கனிமொழி கைது பீதி என துவண்டு போயிருக்கும் திமுக கூடாரத்தை, குஷி படுத்த ஹெட்லைன்ஸ் டுடேவின் திமுகவுக்கே வெற்றி என்னும் பிந்தைய கருத்துக்கணிப்பு    சற்று ஆறுதல் படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைமை கூட சற்று பொறுத்திருக்க வேண்டியது அளவு காலம் "கனி"ந்திருக்கிறது.

இதே நம்பிக்கையை மக்களிடையே, கொண்டு சேர்ப்பதற்கு இப்போது வடிவேலு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

ராணா படப்பிடிப்பு துவங்கும் நாளில் திருமணம் செய்திருப்பதால் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் நடைந்திருப்பதால், அவர்களுடன் ரஜினியை இணைத்து வேறு ஒரு பீதியும் கிளம்பியிருக்கிறது.

"என்னோட ராசி நல்ல ராசி.. என்னால அனா மட்டும் எல்லோருக்கும் லாபம்" என்ற ரஜினி பாட்டுக்கேற்ப, ராணா துவக்க நாளில், திருமண நாளில் திருமணம் செய்திருப்பதால், வில்லியம் வாழ்வாங்கு வாழ்வாராம்.(இது உலக கோப்பை வெற்றிக்கு பிறகு பரவியிருக்கும் மேனியா!)

தன்னைவிட ஒரு வயது மூத்தவரை திருமணம் செய்திருக்கும் இங்கிலாந்து இளவரசருக்கு 29 வயது தான் என்றாலும் வழுக்கையோடு இருப்பதால் அதிக வயதானது போல தெரிகிறார். ஒரு வேளை இங்கிலாந்து பாரம்பரிய உடையை அணிந்திருப்பதால் அப்படி தெரிகிறதோ? (பேண்ட் மாஸ்டர் போல டிரஸ் போட்டிருக்கார் அது பாரம்பரிய உடையாம்... பாவங்க)

ரஜினியின் ராசிப்படி, இங்கிலாந்து இளவரசரின் வாழ்க்கையும்
சிறக்கட்டும், அவரின் தலைமுடியும் செழிக்கட்டும்.

டிஸ்கி :
இந்திய இளவரசர் ராகுல் காந்திக்கு எப்போது இது போல பிரமாண்ட திருமணம் நடத்தி, அதன் பின் முடிசூட, இந்திய-இத்தாலிய கலவை பேரரசியார் முடிவு செய்துள்ளாரோ?

தமிழக இளவரசர் ஸ்டாலினுக்கு எப்போது, பட்டாபிஷேசகம் நிகழ்த்த, பொதுக்குழு கூட்ட நாள்குறித்திருக்கிறாரோ திருவாரூர் முதல்வர்.. (மதுரை இளவரசர் கவனிக்க...)

 
இப்போதைக்கு வாய் மூடிக்கிறேன்.. வரவேண்டிய நேரத்தில் வருவேன்..

சாய்பாபா போல ஸ்பெக்ட்ரத்திற்கும் காஸ்ட்லி சவப்பெட்டி...


இருபத்தி நாலாம் தேதி இறந்த சாய்பாபாவுக்கு, நாலாம் தேதியே சவப்பெட்டி ஆர்டர் செய்யப்பட்ட விஷயம் ஊடகங்களை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

ரூ1.07 லட்சம் செலவில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஓய்வெடுத்த சாய்பாபா இப்போது நவரத்தினங்களுடன் சமாதியான பின்னரும் சர்ச்சைகள் ஓயாததால், அறக்கட்டளை நிர்வாகிகள் "பிரஸ் மீட்"  வைத்து விளக்கம் சொல்லும் அளவிற்கு, பிரச்சனைகள் உயிர்தெழுந்திருக்கிறது.

பணம், சொத்துக்கள் என்று வந்துவிட்டால், சர்ச்சைகள் வந்து விடும் போல... பத்தும் செய்யும் பணம் இறக்கும் போதாவது சாய்பாபாவை நிம்மதியா இறக்க வழிவிட்டதா என்று தெரியவில்லை.
                              



இந்த சந்தடி சாக்கில், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவை முடக்கும் விஷயத்தில் மத்திய அரசின் கூட்டாளிகள் காங்கிரசும், திமுகவும் வெற்றிக்கோட்டை கடந்திருக்கின்றன.

மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு என்ற பெயரில் , கணக்கு வழக்கில்லாமல் நாட்களை தின்று விட்டு, வரும் சனிக்கிழமை இறுதிநாள் என்ற நிலையில் பிரதமரையும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவையும் குற்றம் சாட்டி வரைவு அறிக்கை தாக்கல் செய்தார் அந்த குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

270 பக்கமுள்ள வரைவு அறிக்கையில் மன்மோகன் சிங், ஆ.ராசா,
ப.சிதம்பரம், ரத்தன் டாடா, கபில் சிபல் ஆகியோரை குற்றம் சாட்டும் வார்த்தைகள் இருந்த நிலையில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அந்த வரைவு அறிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு தேவையே இல்லை, பொதுக்கணக்கு குழுவே போதும் என்று முன்பு கூவிய ஜோஷிக்கு இப்போது காங்கிரஸ் -திமுகவின் கூட்டணி வலு நிச்சயம் புரிந்திருக்கும்.

ஒரு காலிடம் தவிர்த்து, 21 உறுப்பினர்கள் இருந்த பொதுக்கணக்கு குழுவின் புதிய தலைவரை தேர்தெடுக்க முன்மொழிந்தவர் காங்கிரஸ் உறுப்பினர் அருண்குமார், வழிமொழிந்தவர் திமுகவின் திருச்சி சிவா, தலைவராக தேர்வாகியவர் காங்கிரஸின் சைபுதீன் சோஸ்.

என்ன கொடுமை என்று பாருங்கள், காங்கிரஸ்- திமுக மீது வைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரை, இனி காங்கிரஸ் - திமுக கூட்டணியே விசாரிக்கப்போகிறது. என்ன ஒரு ஜனநாயகம் நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்.

பொதுக்கணக்கு குழுவை, மிக சாதாரணமாக கைப்பற்றிய காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு, நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவை கலகலக்க வைக்க எவ்வளவு நேரமாகும்?

இப்படியொரு குழுவை அமைக்கத்தான் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை பல நாட்கள்  முடக்கி, பல கோடிகளை வீணடித்து கூத்து அடித்தார்களா?

போபால் விஷவாயு வழக்கில் ஆண்டர்சனை நழுவவிட்டது போல, போர்பஸ் பீரங்கி வழக்கில் குவாத்ரோட்சியை நழுவவிட்டது போல, ஸ்பெட்ரம் வழக்கிலும் இனி "தப்பவிடும்" படலம் நடைபெறும். என்ன இந்த முறை தப்பபோவது ஒரு பெருங்கொண்ட கூட்டம்.

இது பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை என்கிறீர்களா, வாங்க வாழ்க ஜனநாயகம் என்று கத்திவிட்டு, ரானா பற்றி பேசலாம்.    

ரஜினி, ரவிக்குமார், ரஹ்மான், ரத்னவேலு , ரானா என்று ஒரே "ர" மயமாக இருக்கும் படத்தின் பெயர் ராணா இல்லை ரானா என்று B.H.அப்துல் ஹமீது மாதிரி சொன்ன ரவிக்குமார் இப்போது படவிளம்பரத்தில் ராணா என்று தான் போட்டிருக்கிறார்.

ராணா படம் பற்றிய கவலை எந்த "ரா" என்பது இல்லை, படத்தின் கதையை ரஜினி எழுதியிருக்கிறார் என்னும் தகவல் தான் சற்று பீதியை கிளப்புகிறது. வள்ளி, பாபா என ரஜினி கதை இலகாவுக்கு வந்தாலே சற்று பயமாக இருக்கிறது.                                          
 

தயாரிப்பது ஐஸ்வர்யாவின் ஆக்கர் மூவிஸ் என்பதும் பயத்தை கிளப்புகிறது. இது வரை ஆக்கர் மூவிஸ் ஆக்கபூர்வமாக வெற்றியை தந்ததில்லை என்பது தான் அதற்கான காரணம்.

பார்க்கலாம் "ர" கூட்டணி என்னவாக போகிறது என்று...





பிரபல பதிவர்க்கு கடும் கண்டனம் - நையாண்டி தர்பார் உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானங்கள் விபரம்.

 பதிவர்களுக்கு பதிவெழுத விஷய தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ள,
மிக பரபரப்பான சூழ்நிலையில் நேற்று கூடிய ரோஜாப்பூந்தோட்டம் வலைப்பூவின் நையாண்டி தர்பார் உயர் மட்ட செயல் திட்டக்குழு கீழ்காணும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.



                      
சாய்பாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திலிருந்து லாரி, லாரியாக தங்கமும், வெள்ளியும் இடம்மாற்றப்படுவதையும், தமிழக அரசு தலைமைசெயலகத்திலிருந்து ஆவணங்கள் மாற்றப்படுவதையும் இணைத்து எழுதி மக்களை பீதிக்கு உள்ளாக்கும் ஊடகங்களை இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு வன்மையாக கண்டிக்கும் அதே நேரத்தில், தேவைப்பட்டால் அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கிறோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி விசாரிக்கும் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்கும் பரளி பனோகர் ஜோஷி, எட்டாம் வகுப்பு கணக்கு பாடத்தில் பெயிலானவர் என்ற ஆதாரம் எங்களுக்கு கிடைத்திருப்பதால் அவர் தனது கணக்கு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த தீர்மானத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.(எங்கள குத்தம் சொன்னா விட்ருவோமா?)

எப்படியும் அடுத்த ஆட்சி எங்களுடையது தான் என்பது தேர்தல் கமிஷன் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளதால், சட்டசபை கொடநாட்டு எஸ்டேட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும், முதல் அமைச்சரவை கூட்டம் மட்டும் சென்னையில் நடைப்பெறும் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த இந்த உயர்மட்ட திட்டக்குழு உறுதி பூணுகிறது.
        

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு எனப்படும் ஜே.பி.சி.யிலும் எங்கள் அண்ணன் ஆ.அரசன் அவர்களுக்கு விசாரணைக்குழு தலைவர் பதவியை வழங்க வேண்டுமாறு இந்த தீர்மானத்தின் மூலம் பரிந்துரைக்கிறோம். (இல்லையென்றால் லோக்பால் கமிட்டி மீது சேற்றை வாரி இறைத்தது போல அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு, ஊழல் மோட்சம் அளிக்கப்படும்)  


தன்னுடைய வலைப்பூவை யாரும் காப்பி செய்யாதவாறு தடுத்துள்ள நம்பர் 1 பதிவர் சி.பி.செந்தில் குமாரை இந்த உயர்மட்ட திட்டக்குழு கடுமையாக திட்டுகிறது. ஒரு குடும்பத்தில் வேலையில் இருப்பவர்கள், வேலையில்லாதவர்களுக்கு உதவுவது போல, பதிவெழுத விஷயம் இல்லாதவர்களுக்கு, விஷயம் இருப்பவர்கள் உதவுவது தானே முறை.

ஒண்ணு காபி செய்யப்படுவதை தடுக்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுங்கள், இல்லையெனில் காபி செய்ய விடுங்கள், நீங்கள் படித்த சிறந்த கருத்துக்களை உங்களை தொடர்ந்து, நாங்களும் பகிர்கிறோம். டீலா நோ டீலா..
(இங்கே கண்டனம் தெரிவித்து விட்டு, தனி மின்னஞ்சலில் ஹி ஹி ஹி சொல்ல மாட்டோம்..)
                                                

காமன்வெல்த் கமிட்டி கலக்கல் கதாநாயகன் கல்மாடியை செருப்பால் அடித்ததை இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. ஊழல் மூலம் கொள்ளை அடிப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் இது போன்ற செயலை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
      
ஐ.பி.எல்லில் சிக்ஸர் அடிக்கும் போதெல்லாம் சியர்ஸ் கேர்ள்ஸ் உற்சாகப் படுத்துவதை போல,, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, ஒவ்வொரு ரவுண்டிலும் முன்னிலை அறிவிக்கப்படும் போது, வேட்பாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மகளிர் அணியினர்  நடனமிட
அனுமதி அளிக்க தேர்தல் கமிசனை இந்த தீர்மானத்தின் மூலம் வேண்டி, விரும்பி, கெஞ்சி, கொஞ்சி கேட்டுக்கொள்கிறோம். (எங்களுக்கு கொள்கை தான் முக்கியம் என்பதையும் இங்கே, இந்த நேரத்திலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்) 

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு போடுபவர்களுக்கு, உடனடியா சில பல வைரஸ்களை அனுப்பும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அளிக்குமாறு தொழில்நுட்ப பதிவர் "வலையுலக பில்கேட்ஸ்" சசிக்குமார் அவர்களை இந்த உயர்மட்ட திட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.
  

டிஸ்கி:
இந்த பதிவிற்கு ஹி..ஹி...ஹி... என பின்னூட்டம் இட தடை விதிக்கப்படுகிறது.

ஐ...!  எங்களுக்கும் விருது கிடைச்சிருக்கு.


"ஓவரா பேசுனது போதுங்கப்பா...பூட்டு போடணும் உங்க வாய்க்கு" விருது வழங்கி கௌரவித்த பிரபல பதிவர் அண்ணன் மகுடி மாவீரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

என் கர்வம் அழிந்ததடி...

சூரியன் வந்து வெளிச்சம் வீசாத அளவு, அடர்ந்து கிடந்த மனக்காட்டில், ஒற்றை சொல்லெறிதலில் கலவரம் பூக்க வைத்த நிகழ்வு நிகழக்கூடுமென்று கனவிலும் நினைத்ததில்லை அவன். கிரீடம் சுமந்து, கம்பீர வலம் வந்தவன், மகுடம் சரிய மயங்கி கிடக்கிறான்.
  
*அதெல்லாம் முன்பு...
கொஞ்ச நேரம்
நிலவு, நட்சத்திரம்
பார்த்து
பதிலுக்கு கண்சிமிட்டி..
கொஞ்ச நேரம்
கவிதைக்கான வரிகளை
செய்நேர்த்தியுடன் கோர்த்து...
பின் அசந்து தூங்கி
அலாரமடித்ததும்
பதறி எழுந்து.....

*இப்போதெல்லாம்
அலாரம் அடிக்கும் வரை
விழித்திருக்கிறேன்.,
பின்பு சிரமமாய்
புரண்டு...

*எங்கே போயிற்று
என் தூக்கம்
என் நிலவு.

எங்கே போய் தொலைந்தது
என் கவிதைகள்?


*"நீர் தான்
காதல் என்பவரோ"
என் கர்வம் கட்டபொம்மனாய்
கேள்வி கேட்டது.
பின் தூக்கிலிடப்பட்டது.

*எப்படி இது
எனக்குத்தான்
காதலில் உடன்பாடு இல்லையே?

எப்படி
என் மரணம் சம்பவித்தது?

மரணித்த பின் வலிக்கிறதே
இது என்ன?

*கேள்வி கேட்டவள்
கனவுகளோடு
உறங்கிக்கொண்டிருக்க...
பதில் சொல்ல வேண்டிய
நான்
இங்கே சிம்மாசனத்தின் ஓரம்
ஒருக்களித்து
இருக்கிறேனே

இது என்ன நியாயம்?

*சரி...
நாளை வருகிறேன்.

கனவுகளும், களவுகளும்
இல்லாத என் தேசத்தில்
நானே களவாடப்பட்டதை
உறுதி செய்ய...


பதிவுலகம் கொஞ்சம் ராங்காத்தான் போய்கிட்டிருக்கு...


"தெரு முனையில் நின்று கொண்டிருக்கும் நாய் வருவோர் போவோரையெல்லாம் பார்த்து குலைத்துகொண்டிருப்பது போல, உங்களில் சில பதிவர்களும், டுவிட்டர்களும் வருவோர் போவோரை எல்லாம் பார்த்து திட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கடுமையானதொரு விமர்சனத்தை என் முன் வைத்தார் ஒருவர்.

இது கொஞ்சம் கர்ணகொடூரமான விமர்சனமாகவே தோன்றியது. நான் ஏதேனும் பதில் சொன்னால் நானும் கடிக்க வருகிறேன் என்று சொல்வாரோ என்று தயக்கமாக இருந்தது.(இளைஞ்சவங்ககிட்டதான் எகிறுவாங்க..)

முன்பு திண்ணைகளில் உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவார்கள் இப்போதெல்லாம் கணிணி வைத்து, இணையம் மூலம் முதல்வர் முதல் சகபதிவர்கள் வரை வம்பிழுக்கிறார்கள் என்று அவர் அடுத்த தாக்குதலை ஆரம்பிக்க, "தெரு நாய்களும், சில பதிவர்களும்" என்று தலைப்பை போட்டு, அவர் சொன்னதை அப்படியே பதிவாக மாற்றலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த என் ஹிட்ஸ் ஆசையில் மண் விழுந்தது.

உங்களுக்கு தெரியாதுங்க, முன்னாடி ஒரு முறை வம்புச்சண்டை மூலமா ஹிட்ஸ் ஏத்திக்கொண்ட உங்க பதிவர், இப்பவும் பித்து பிடிச்சமாதிரி ஏகத்துக்கு கத்தி, ஆபாசமா எழுதியிருக்காரு" அவர் தொடர.. 

எனக்கு தெரியாத விஷயம் தெரியாததாகவே இருக்கட்டும் என்று மேற்கொண்டு ஏதும் விவாதிக்கவில்லை.

அவர் இன்னும் கொஞ்சமும் கூட பேசினார். அவர் வார்த்தைகள் என்னையும் கொஞ்சம் உலுக்கியது. நானும் இது போல ஏதேனும் செய்திருக்கிறேனா என்று எண்ணமிட தோன்றியது.

சங்கரனுக்கு விழுந்த சாட்டையடி சகல ஜீவராசிகள் மீது புராணத்தில் விழுந்தது போல, எங்கே யாருக்கோ அவர் வீசிய சாட்டை, அழுத்தமான சவுக்கடியாக என்மீதும் விழுந்தது.

"என்னிடம் எழுத்து என்னும் சவுக்கு இருக்கிறது. யாரை வேண்டுமானலும் நான் அதனால் அடிப்பேன். கட்சி தலைவராக இருந்தாலும், சினிமா இயக்குனராக இருந்தாலும் விடமாட்டேன்
என்று சகட்டுமேனிக்கு பதிவு எழுதுபவர்கள், வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?"

வாசகர்கள் கண்டித்து எழுதும் கண்டன கமெண்ட்களை வெளிவிடாமல் ஸ்பெம் அல்லது டெலிட் செய்து விடலாம். ஆனால் அதிலிருக்கும் வார்த்தைகள் நிச்சயம் அவர்களை உறுத்தும் என்பது உண்மையே.



எல்லோராலும் சினிமாவுக்கு எழுத முடியாது, எல்லோராலும் ஆனந்த விகடனில் எழுத இயலாது என்பது யதார்த்தம். நமக்கான வெள்ளித்திரையாக, விகடனாக வலைப்பூ கிடைத்திருப்பது,இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதனை வெட்டி திண்ணைப்பேச்சாக மாற்றி விடாமல், எழுத்தை மிளிரச்செய்வதற்கான படியாக, சமுகம் மீதான கோபத்திற்கான நியாயமான வெளிப்பாடாக மாற்றிக்கொண்டால் நல்லதுதானே.

ஒவ்வொரு பதிவிலும் நம்முடைய எழுத்தின் வீரியம் அதிகரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டால் இது சாத்தியமே.

வலைப்பூக்களை சினிமா உலகத்திற்கு செல்ல வழியாகவும், பத்திரிக்கை ஊடகத்திற்கு செல்லும் வழியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மிகபெரிய ஊடக உலகத்திற்கு செல்ல விசிட்டிங் கார்டாக நம்முடைய வலைப்பூ எழுத்துக்கள் இருக்க வேண்டும். 


அப்படியான தேவையில்லாதவர்களுக்கு  பழக பழக வரும் தமிழ் என்பதற்கு ஏற்ப, நம்முடைய எண்ணங்களை, எழுதும் விதத்தை மேம்படுத்த வலைப்பூக்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்.

டிஸ்கி :
நான் மானமில்லாதவன், நீ மானமுள்ளவன் எப்படி வசதி என்னும் வடிவேலு வசனம் சம்பந்தமில்லாது ஞாபகத்திற்கு வருகிறது.

ரொம்ப யோசித்தால் இனி மேல் பதிவே எழுத முடியாது போல தோன்றுகிறது. (அதனால் தானோ என்னவோ இந்த பதிவு முழுமையடையாத பதிவு போல, சொல்ல வந்ததை தெளிவாக சொல்லமுடியாத பதிவாகவே எனக்கு தோன்றுகிறது)

நடிகர் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் விக்ரம் அவர்களே...


 "அதிகமாய் சம்பாதிக்கும் ஒருவனுக்கு, ஒரு நிலைக்கு மேல் பணம் என்பது வெறும் கலர் காகிதமே"
நடிகர் விக்ரம் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இந்த வார்த்தைகள் தான், இதுவும் விக்ரம் சொன்ன வார்த்தைகள் தான்.

முந்தைய படம் பிளாப் ஆனாலும், அதில் நஷ்டப்பட்டு வீழ்ந்தவர்களை பற்றி கவலைப்படாமல், அடுத்த படத்தில் நடிப்பதற்கு கிளம்பி, வருடத்திற்கு மூன்று படங்களில் நடித்து கல்லா கட்ட நினைக்கும் நடிகர்களில் மத்தியில், நல்ல படங்களை தெரிவு செய்து, மனத்திருப்திக்காக நடித்து வரும் நடிகர் விக்ரம் பணத்தை குவிக்கும் எண்ணத்திலிருந்து விடுபட்டு, குவித்த பணத்தை நல்ல காரியங்களுக்காக செலவிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகராகவும், நல்ல மனிதராகவும் தன்னை அடையாளப்படுத்திய இந்த சமுதாயத்திற்கு, நன்றி செலுத்தும் விதமாக, தன்னுடைய இரண்டு விதமான அமைப்பு பற்றிய அறிவிப்பினை செய்துள்ளார் விக்ரம்.
குடிசை வாழ் குழந்தைகளின் கல்வியை உயர்த்த, "கற்க கசடற" என்னும் புதிய அமைப்பினை துவக்க இருப்பதாக நடிகர் விக்ரம் அறிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் அமைப்பினை தன்னுடைய வழிகாட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவின் வேண்டுகோள்.

அகரம் பவுண்டேசன் மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவ மாணவியரின் கல்லூரி படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அடுத்த ஆண்டிற்காக மாணவியர்களை தேர்வு செய்யும் பணி இப்போதே தொடங்கிவிட்டது. இன்னும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வராத சூழலில், அதற்காக காத்திருக்காமல், விண்ணப்பத்திருக்கும் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களையும் ஆராய்ந்து, அவர்களின் குடும்பச்சூழலை தொலைப்பேசியில் கேட்டறிந்து,அதன் அடிப்படையில் மாணவர்களை நேர்முகத்திற்காக அழைத்திருக்கிறார்கள்.

அதாவது உதவித்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் தெரிவு கூட, மிக சரியான வழிமுறைகளில் நடைபெறுகிறது.

இந்த வாரம் முழுவதும் நடைபெறும் நேர்முகம் முடிந்தபின், மீண்டும் ஒரு முறை அவர்களை வரவழைத்து, அவர்களின் தனித்திறமைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்குரிய கல்லூரி படிப்பினை தேர்வு செய்வதற்காக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

கல்லூரியில் சேரும் போது கல்வி உதவித்தொகை வழங்குகிறார்கள்.

சரி, பணம் தான் கொடுத்தாச்சே என்று விட்டுவிடாமல், கல்லூரி படிப்பின் இடையே கிடைக்கும் விடுமுறை நாள்களில் ஸ்போக்கன் இங்லீஷ், கணிணி பயிற்சி, தனித்திறன் பயிற்சி என தொடர்ந்து அவர்களுடைய வாழ்வில் இணைந்திருக்கிறது அகரம் அமைப்பு.

சென்ற ஆண்டு உதவித்தொகை வழங்கிய மாணவர்களுக்கு இன்னமும் பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது அகரம்.

அகரம் அமைப்பின் மூலம் உதவி பெற்று, கல்லூரி படிப்பை முடிந்து வரும் ஒரு மாணவன் கட்டாயம் வேலைவாய்ப்புக்கும், வாழ்க்கைக்கும் உரிய அனைத்து விஷயங்களையும் கொண்டிருப்பான் என்பது சர்வநிச்சயம்.

கிட்டத்தட்ட ரமணா படத்தில் வருவது போல, ஒரு சமுதாய புரட்சியை ஏற்படுத்தும், தனக்கான திறமைமிக்க மனிதர்களை உருவாக்கும் பாதையில் நடிகர் சூர்யா போய் கொண்டிருக்கிறார்.
 ஏதோ மாணவர்களுக்கு பணம் கொடுத்தோம், அதை போட்டோ எடுத்து ஆனந்த விகடனில் போட்டோம், வீடியோ எடுத்து விஜய் டிவியில் விளம்பரத்திற்காக காட்டினோம் என்று "படம்" காட்டாமல் தொடர்ச்சியாக, சரியான திட்டமிடலோடு, கல்லூரி படிக்கும் காலம் முழுமையும் மாணவர்களுக்குரிய சிறப்பான பயிற்சியை அளிக்கும் அகரம் அமைப்பு போன்று விக்ரம் அவர்களின் "கற்க கசடற" செயல்பட வேண்டும்.

சரியான திட்டமிடலோடு நடத்த இயலாவிட்டால், விக்ரம் சில நடிகர்களை போல வெறும் விளம்பரத்திற்காகத்தான் சமுகசேவர் வேடத்தில் "நடிக்க இருக்கிறார்" என்று தான் சொல்ல வேண்டும்.

டிஸ்கி:
விக்ரமின் பச்சைப்புரட்சி என்னும் மரம் நடுவதற்கான அமைப்பை விட, கல்வியளிக்க இருக்கும் "கற்க கசடற" அமைப்பு சிறந்ததாகத்தெரிகிறது.
(ஏற்கனவே மரம் நடுகிறேன் என்று ஏகப்பட்ட "படம்"  மற்றும் "பப்படம்" காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மரம் நடுவதோடு நிறுத்தி விடுகிறார்கள். அதன் தொடர்ச்சியான கண்காணிப்பை செய்யாமல்)

வித்தியாசமான வேடங்களில் மெனக்கெட்டு மனத்திருப்திக்காக,  நடிக்கும் விக்ரம், ஒரு நகை அடகு கடையின் விளம்பரத்தில், நடித்தது
தவறு தானே என்று நீங்கள் கேட்டால், என் பதில் ஆம் என்பது தான்.

பதிவுலக தாதாவாக துடிக்கும் சாதா பதிவர் - வலைப்பதிவு மேனியா பற்றி அதிரடி ரிப்போர்ட்.


வணக்கம் நேயர்களே, இன்றைய நமது நிகழ்ச்சியில் பதிவுலக தாதாவாக மாறத்துடிக்கும் ஒரு சாதா  என்ன அறிகுறிகளை கொண்டிருக்கக்கூடும் என்பது பற்றிய மருத்துவக் குறிப்புக்களை பார்க்கப்போகிறோம்.

இது வலைப்பதிவு மேனியா - பதிவர்களை தாக்கும் நோய், இதன் அறிகுறிகளை நீங்களும் கடந்து வந்திருக்கக்கூடும், அல்லது இப்போதும் இந்த அறிகுறிகள் உங்களுக்குள் இருக்கக்கூடும்.

எப்போதும் Stats பார்த்துக்கொண்டே இருப்பது.

பின்தொடருபவர்கள்  அதிகரிக்கும் போது, புது சொத்து வாங்கின மாதிரி சந்தோஷப்படுவது.

ஆன்- லைனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஆராய்வது, தான் மட்டும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் விரக்தியாவது.

பிரபல பதிவர்களின் பதிவுகளை ஆராய்ந்து, நம்மள விட கேவலமா எழுதியிருக்கிறான் (கவனிக்க அன் விகுதி) ஆனா இவ்வளவு பேர் வந்து பாக்குறாங்களே என கலங்குவது.

அரசியல் கூட்டமா இருந்தா, பிரியாணி குடுத்து ஆள் தேத்தலாம் இப்ப என்ன பண்றது என மருகுவது.

பின்னூட்டமே இல்லாமல் இருப்பதால், தானே மச்சம் வைத்து, மாறு வேடத்தில் வந்து, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவது.

கம்பியூட்டர் தெரியாதுனு சொல்லி, எஸ்கேப் ஆகுற சொந்தகாரங்ககிட்ட, நீங்க தாங்க சின்ன பில்கேட்ஸ் அப்படினு புளுகி ஃப்ளாக் ஆரம்பிக்க மார்க்கெட்டிங் செய்வது-- அட ஓட்டுப்போட ஆள் கிடைக்குமில்ல.

யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால், தானே கள்ள ஓட்டு போட களமிறங்குவது. ஆனா பாருங்க இப்பவெல்லாம் திரட்டிகள் ரொம்ப உஷாராயிட்டாங்க.(அப்படினா முன்னாடி கள்ள ஓட்டு போட்டிங்களானு கேட்டா..ஹி ஹி ஹி, நமக்கு தற்பெருமை புடிக்காதுங்க)


புதிய பதிவர்களின் பதிவுகளை தேடிப்போய் நீளநீளமாய் பின்னுட்டுவது, (நம்ம இனமில்ல.)பிரபல பதிவர்களுக்கு ஒற்றை வரியில், ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு கடுப்படிப்பது.

நல்ல டெரர் பதிவரா பாத்து, அவர்களுடன் சண்டையிடுவது. அடுத்த கட்டமா பஞ்சாயித்த கூட்டுனா "என்ன கைய புடிச்சு இழுத்தாங்க" ரேஞ்சுக்கு என்ன என்ன என கூத்தடிப்பது.

போட்டி வைப்பது, தொடர் பதிவுக்கு வெத்தல பாக்கு தட்டுடன் தடபுடலா கிளம்பி, நான் பொன்னுரங்கம் வந்திருக்கேன் என பீதிய கிளப்புவது.

பதிவிட விஷயம் கிடைக்காத போது விஜய், விஜயகாந்த்,தங்கபாலு,  இவர்களின் வயிற்றெரிச்சலை கிண்டுவது.

கும்மியடிக்கும் கூட்டத்தாரோடு சேர்ந்து, "நானும் பெரிய ரௌடிதாங்க" வாலண்டிரியா ஜீப் ஏறுவது.

சமயத்தில் கும்மி கூட்டத்தாரின் போதைக்கு ஊறுகாயாக மாறி தவிப்பது.

கொஞ்ச நாள் பதிவு போடாமல் இருந்து விட்டு, தமிழர்களே தமிழர்களே என ஆரம்பித்து, ரொம்ப ஆணீ அதனால.. என இழுவை போடுவது.

சில பதிவர்கள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு,ஓட்டுப்போட்டு ஹிட்டடிப்பதாக, பார்லிமெண்டை கலங்கடித்து, லோக்பால் விசாரணையை கோருவது.

ஆன் லைன் ஆனந்த விகடனில் உறுப்பினராகி, எல்லா வகை விகடன் களின் கட்டுரைகளையும் வலைப்பூவில் போட்டுத்தாக்குவது. (யார் கண்ணுக்கும் தெரியாமல் நன்றி: விகடன் குழுமம் என்று போட்டுக்கொள்வது)
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும் என்று டெம்பிளேட் கமெண்ட் போட்டு, பதிவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வது. (உனக்கு நான் மொய் வைத்திருக்கிறேன், பதிலுக்கு எனக்கு மொய் வைக்க வேணாமா?)







 
கருணாநிதியின் வியாபார ஆலோசகர் போலவும், கோட நாடு தோட்டத்தின் ஆஸ்தான வித்துவான் போலவும், தலைவர்களுக்கே தெரியாத விஷயங்களை, "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற ரீதியில், வலைப்பூவில் எழுதுவது.  

வாரத்திற்கு ஒரு நாள் "பிரபல பதிவரின்...." என தொடங்கும் தலைப்பினை வைத்து, பதிவெழுதுவது. (மற்ற நாள்களில் இருக்கவே இருக்கு கட், காபி & பேஸ்ட் டெக்னாலஜி)
   
கூச்சமே இல்லாமல் சுஜாதா விருதுக்கு தங்கள் வலைப்பூ விபரங்களை அனுப்புவது.(தகுதியுடையவர்க்கு அது கிடைக்கும் போது, நடுவர் குழுவை திட்டுவது) இந்த வருட இணையதளத்திற்க்கான விருது பெற்ற யுவகிருஷ்ணா அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்)

நேரமில்லாத போது, தனது பழைய பதிவையை, பில்லா 2011 ரேஞ்சில் ரீமேக் செய்வது (இந்த பதிவு, அந்த வகையைச் சேர்ந்தது தான் யுவர் ஆனார்) இது மாற்றங்களுடன் கூடிய மீள்பதிவு.


"அண்ணல்" ரேஞ்சில், சகட்டுமேனிக்கு சகபதிவர்களை திட்டிவிட்டு, இது யாரையும் குறிப்பிட்டு அல்ல, என்னை நானே கேட்டுக்கொள்வது என பீதியை கிளப்புவது.

விளம்பர இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும்.

இந்த பதிவை படித்துவிட்டு, கொதிப்பாகி கண்டன தீர்மானம் போட்டு விட்டு ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்.
இப்ப சொல்லுங்க நாயக்கரே நீங்க நல்லவரா, கெட்டவரா?

புலியின் வால் பிடித்து ஓர் விளையாட்டு...

வன்மம் சுமந்து திரிந்த நாள்களில், ஒரு பகைமையை வஞ்சம் வைத்து தீர்த்த, முன்நாளின் கதை இங்கே கவிதையாய்.....

*அவன் வார்த்தைகளால்
உண்டான அவமானத்தை
முகம் சுருக்கி
சுட்டிக்காட்டினேன்.
-புரிந்து கொள்ளவில்லை.
 
*மனதிற்குள்சின்னதொரு
கறுப்பு புள்ளி
விழுந்தது.






*பின்
வார்த்தைகள் நீண்டதில்
கறுப்பு விரிவடைந்தது.
 

எனக்கே
தெரியாமல்
யுத்தமுஸ்தீபுகள்
எனக்குள்
நிகழ்ந்தன.

*போர் முரசங்கள்
அதிர்ந்தன.
கண் அசைவுக்கு
வீரர்கள்
குதிரையுடன் காத்திருந்தனர்.


*"போர் என்பது
தவறல்ல.."
என
கீதை உபதேசம்
முடித்த பின்
தயக்
மின்றி
என் காண்டீபம் உயர்ந்தது.
*உறவு
மறந்து போனது.,
இவன் எதிரி
இவன் எதிரி
என்பது மட்டும்
மனதுள் ஓடியது.

அஸ்திரங்கள்
மழையாய்
பொழிந்தது.
*மயங்கி வீழ்ந்து
பின்
மரணித்துபோனான்.
எதன் பொருட்டு
இந்த போர்
என்பதை
உணர்ந்து கொள்ளாமலே...
 


"முதல்வர்"ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் ஆப்புக்களும்,மங்குனி அமைச்சரின் ஆலோசனைகளும்.



"ஒரு வேளை" ஜெயலலிதா முதல்வரானால் காத்திருக்கும் சவால்கள்...


தமிழக அரசின் மோசமான நிதி நிலைமை. 
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி அளவில் கடன் இருப்பதாக பேச்சு. (இலவசங்களை தொடர வேண்டிய கட்டாயம் இருப்பதால் நிதி நிலைமை இன்னும் மோசமாகும்)


தொடர்ந்து நீடித்து வரும் மின்சார பிரச்சனைகள்.


விஷம் போல அதிகரித்து வரும் விலைவாசி.


நலிந்து வரும் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் (ஏற்றம் என்பது விவசாயின் வாழ்வில் வரும் போது தமிழகம் நிரந்தரமாக முன்னேற்றப்பாதையில் நடைபோட ஆரம்பிக்கும்)


நிரந்தர பிரச்சனைகளாக இருக்கும், முல்லை-பெரியாறு, காவிரி பிரச்சனை, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் அடிக்கடி தாக்கப்படுவது.


எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்.


அரசின் நடைமுறைகளில் அதிகரித்திருக்கும் தனிப்பட்ட சிலரின் அதீததலையீடுகள்.




மங்குனி அமைச்சரின் "தில்லாங்லங்கடி" ஆலோசனைகள்: 

விடுங்கம்மா, ஆட்சிக்கு வந்த முதல் நாளே "கஜனா காலி, கருணாநிதி அத்தணையும் சுரண்டி விட்டு போய் விட்டார்" என்று டெரர் அறிக்கை வெளியிட்டு மக்களை முன்கூட்டியே உஷார் பண்ணிவிடலாம். பயபுள்ளைகளும் கொஞ்சநேரம் அழுதுட்டு தூங்கிருவாங்க.


நிதி நிலைமையை சீராக்க, டாஸ்மார்க் நிறுவனத்தில், நம்ம மிடாஸ் கம்பெனி தயாரிப்புகளில் நிறைய புதிய வகைகளை உருவாக்கி, விற்பனையை அதிகமாக்கி, கஜானாவை நிரப்புதல்.


மின்சார தட்டுப்பாட்டிற்கு, கேரளா மற்றும் கர்நாடக அரசுகளுடன் கருணாநிதி, ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் தான் மின்சார தட்டுப்பாடு வந்தது என்று முழங்கலாம்.


சீசன் பிரச்சனைகளாகிய காவிரி, முல்லை-பெரியாறு பிரச்சனைகளில் அந்த நேரத்துக்கு ஏற்ப, தபால்-தந்தி, உண்ணாவிரதம் என ஏதாவது டிராமா நடத்தி அப்போதைக்கு ஆறப்போடுவது.


ஊழலை ஒழிக்க என்று தனி அமைச்சகம் அமைத்து. முந்தைய அரசுகளின் கள்ளத்தனங்களை விசாரணை கமிஷன் மூலம் பெரிய தலைகளை, நள்ளிரவில் உருட்டி மக்களின் பிற கவலைகளை மறக்க வைத்தல். 


ரஜினிகாந்தை கொஞ்சம் வம்புக்கு இழுத்து, தமிழக ஊடகங்களை நிரப்பி, வெறும் வாயை மெல்லும் மக்களுக்கு, அவல் கொடுத்து,யதார்த்தங்களை மறக்கடிப்பது.


நிழல் அரசாங்கம் நடத்தும் மன்னார்குடி ராஜவம்சத்துக்கு அதிக அதிகாரம் கொடுப்பதற்க்காகவே சசிகலாவை துணை முதல்வராக்குவது.




மதியூக அமைச்சரின் யதார்த்த ஆலோசனைகள்:


அதிக செலவு வைக்கும் அத்தியாவசியமில்லாத இலவச திட்டங்களை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து, அரசின் பயனுள்ள நலத்திட்டங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்கி, நிலைமையை சீராக்கலாம்.


இயன்ற வரை இலவசங்களை குறைத்து, அந்த பணத்தினை மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு உபயோகப்படுத்தலாம்.


காற்றாலைகள் உருவாக்குதல்,  மரபு சார எரிபொருள்கள் மூலம் மாற்று வழிகளின் மூலம் மின்சார தேவைகளை ஈடுசெய்யலாம்.


நதிகள் பற்றிய பிரச்சனைகளுக்கும், ,மீனவர் பிரச்சனைகளுக்கும் வெறுமனே டிராமா நடத்திக்கொண்டிருக்காமல் நிரந்தர தீர்வை உண்டாக்க, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தல்.


ஊழலை எந்த மட்டத்திலும் அனுமதிக்காமல் முன்னுதாரணமாக இருத்தல்.


தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரின் நிழல் அரசாங்கத்திற்கு, வழி விட்டுவிட்டு, ஜெயலலிதா நல்லவர், சசிகலா தான் கெட்டவர்  என்று உங்களுக்காக யார் பரிந்து பேசினாலும் அது எடுபடபோவதில்லை.

(பொழுது போக்க வளர்ப்பு செல்லப்பிராணிகள் மட்டும் உங்களிடம் இருக்கட்டும் - வளர்ப்பு மகன்களும் வேண்டாம், அவர்தம் திருமண கூத்தும் வேண்டாம்.)


பழிவாங்கும் நடவடிக்கைகளிலு, திரைப்பட துறையினரின் பாராட்டு விழாக்களிலும் நேரத்தை வீணாடிக்காமல், எளிய ,மக்களுக்கான ஆட்சி நடத்தி, பெண் எம்.ஜி.ஆர் என அடித்தட்டு மக்களிடம் பெயர் வாங்க வேண்டும்.


மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது, தடாலடி நடவடிக்கைகளை அல்ல, நம்பகத்தன்மையை மட்டும் தான். எல்லோருக்கும் இணக்கமான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது கூட தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொன்னது உங்கள் தன்னம்பிக்கையை காட்டினாலும், கூட்டணி கட்சிகளுக்கு பூச்சாண்டி  காட்டி,கலவரப்படுத்தாமல், அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  
ஜெயலலிதாவுக்கு ஒரு வார்த்தை:


நீங்கள் எதையெல்லாம் கலைஞரின் குறைபாடுகள் என்று சுட்டிக்காட்டி, 
மக்களின் ஓட்டுக்களை வாங்கினீர்ளோ, அதே தவறுகளை நீங்களும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.



டிஸ்கி:
மங்குனி அமைச்சர் சொல்வதை ஜெயலலிதா கேட்பாரா அல்லது மதியூக அமைச்சர் சொல்வதை ஜெயலலிதா கேட்பாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

விரைவில்:
ஒருவேளை மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும், தீர்வுகளும்.  

அரசியல் நடுநிலை தவறிவிட்டதா ஆனந்த விகடன்??? -ஒரு நடுநிலையான,அதிரடி விவாதம்.

முஸ்கி:
பிடிச்சவங்க பிடிக்காதது செய்தாலும் பிடிக்கும், பிடிக்காதவங்க பிடிச்சது செய்தாலும் பிடிக்காது. எனக்கு விகடன் பிடிக்கும். ஆதலால் நடுநிலையாய் இந்த பதிவினை கொண்டு செல்ல முடியவில்லை. 


இரு வகையான வாதங்கள் இங்கே இருக்கின்றன, சரியான தீர்ப்பை நீங்களே நடுநிலையாக, முடிவு செய்து சொல்லுங்கள்.(தீர்ப்பு சொல்லிட்டு பேனா முனையை உடைச்சுடுங்க, யுவர் ஆனர்)



நிறைய குடும்பங்களில், ரேசன் கார்டில் பெயர் இல்லாத உறுப்பினராக மாறிவிட்ட ஆனந்த விகடனின் நடுநிலை பற்றியும் எப்பொழுதாவது சர்ச்சைகள் எழுவதுண்டு. 


முன்பு நாடோடிகள் படமும், விகடன் தயாரிப்பில் வந்த வால்மீகி படமும் ஒரே நேரத்தில் வெளியான போது, வால்மீகிக்கு உடனடியாக விமர்சனம் எழுதி, அதிக மதிப்பெண் கொடுத்து புரோமோட் பண்ணிய பின், அடுத்த வாரம் தான் நாடோடிகள் விமர்சனத்தை விகடன் எழுதிய போதே அவர்கள் படத்தை காப்பாற்ற நடுநிலை தவறுகிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
  
விகடனின் அளிக்கும் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு, படம் பார்க்க போகிறவர்கள் ஏராளம். அதே போல விகடனின் தலையங்கம், அரசியல் கட்டுரைகளை படித்துவிட்டு வாக்களிக்கும் முடிவுக்கு வருபவர்களும் ஏராளம். 



இந்த தேர்தலில் மிக கடுமையான திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு நிலையில் விகடன் செயல்பட்டதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதனை சார்ந்து எழுந்த விவாத குறிப்புக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 


விகடன் நடுநிலை தவறிவிட்டது என்று சொல்லி வைக்கப்படும் வாதம்: 


"திமுகவை காலி பண்ணுங்கள்" என்று அசைன்மெண்ட் கொடுத்தால் எப்படி தீயாய் களமிறங்கி ஒரு கட்டுரையாளர் எழுதுவாரோ அப்படி மிக கடுமையாய், அதிரடியாய் இருந்தது ப. திருமாவேலனின் அரசியல் கட்டுரைகள். 


ஆனந்த விகடன் தலையங்கம் என்றாலே வீரியமிக்கதாக இருக்கும் என்று மக்களிடையே மரியாதையும், மதிப்பும் இருக்கிறது என்பதால், தொடர்ந்து மூன்று வாரங்கள் திமுக தலைமையை, ஆட்சியை தாக்கி, தலையங்கம் எழுதியது. மக்கள் மறந்து விட்ட, ஐந்து வருடத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் அம்பலப்படுத்தியது.


குமுதம், திமுகவுக்கு மிக ஆதரவாக எழுத ஆரம்பித்ததால், ஆனந்த விகடன் தொடர்ந்து திமுக எதிர்ப்பில் இறங்கியது. குமுதத்தின் விற்பனை, விகடனை விட அதிகம் என்பதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்பட வேண்டிய நெருக்கடி விகடனுக்கு இருந்தது.
  
மிக சரியாய் தமிழருவி மணியனை, தேர்தல் நேரத்தில், விகடன் மேடையில் பதிலளிக்க அழைத்து, அவரை "பவர் பிளே" ஆடுமாறு இறக்கி விட்டது. (அவரும் சிக்ஸர்களாய், அடித்து ஆடினார்)


நானே கேள்வி, நானே பதில் பகுதியில், அதிக முறை கிண்டலடித்து, அழகிரியை வதம் செய்தது.


தன்னுடைய மனைவி, மச்சான் என குடும்பத்தோடு "குடி"த்தனகட்சி நடத்தும் விஜயகாந்துக்கு தேவைக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. (பொது மேடைகளில் வடிவேலுக்கு சரிக்கு சரி பதில் சொல்ல முடியாத விஜயகாந்தின் விகடன் பேட்டிகள் மட்டும் மிக அசத்தலாக இருக்கும். ஒரு வேளை விகடனே எழுதிக்கொடுக்குமோ?) 
வி என்று பேர் ஆரம்பித்தால் விகடன் சப்போர்ட் பண்ணுமா?

விகடன் நடுநிலை தவறவில்லை என்று சொல்லி வைக்கப்படும் வாதம்: 


யார் ஆட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியின் தவறுகளை ஊடகங்கள் தட்டிக்கேட்கும். அப்படித்தான் ஆளுங்கட்சியின் தவறுகளை விகடன் அம்பலப்படுத்தியது. முன்பு ஜெயலலிதா ஆட்சியில்  இருந்தபோதும் இப்படித்தான் விகடன் செயல்பட்டது.


ப.திருமாவேலனின் கட்டுரைகளில் நியாயம் இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா? எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்து தவறுகள் புரிந்தால் நிச்சயம், திருமாவேலன் அதையும் சாடுவார்.  

தரமான வார இதழ் என்று பெயர் வாங்கி விட்டதால், குமுதம்  பின்னால் அலைய வேண்டிய அவசியம் விகடனுக்கு இல்லை.


முன்பு வைகோ-வுக்கு எப்படி எழுதியதோ அப்படித்தான், விஜயகாந்துக்கு விகடன் எழுதுகிறது. நிச்சயம் விஜயகாந்த் சொதப்பும் போது நிச்சயம் சாட்டை வீசுவார்கள்.   


விகடன் தலையங்கம், இன்றைய சூழ்நிலையை மட்டும் வைத்து வாக்களிக்க கூடாது என்பதற்க்காக மட்டுமே, ஐந்து ஆண்டுகளில் நடந்த அத்தனை அவலங்களையும் சுட்டிக்காட்டியது. ஐந்து ஆண்டுகளுக்கான மதிப்பீடு தானே இப்போதைய தேர்தல்.
  
அரசியல் நடுநிலை பற்றி கவனத்தை ஈர்த்த தமிழருவி மணியனின் கருத்து :


" நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும், இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து, மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர் தான் அரசியல்.    


மறைமுகமாக அல்ல.. நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதை விட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார். 


இந்திய அரசியலில், இது வரை யார் வரக்கூடாது என்று தான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக்கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள். 


என் வாக்கு... ஜெயலலிதா வரவேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக்கூடாது என்பதற்காக!


ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!"



ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்.

இந்த வார  அரசியல்:
ரஜினியின் துணிச்சலும், அரசியலும்.

ஊருக்குள் சுனாமி வெள்ளம் புகுவது போல, நிருபர்கள், ரசிகர்கள் புடைசூழ, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு சாவடிக்குள், ரஜினி நுழைந்த வீடியோ காட்சியை காண நேர்ந்தது. 


வாக்களிக்கும் போது வாக்காளர் எந்த சின்னத்தில் வாக்களிக்கிறார் என்பது ரகசியமாய் பாதுகாக்க வேண்டிய விஷயம், ஆனால் ரஜினி வாக்களிக்கும்போது, எதற்கு அத்தனை பேர் சுற்றி நின்றுக்கொண்டிருக்க, அந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

இரட்டை இலைக்கு ரஜினி வாக்களித்ததாக, ஊடகங்கள் பகிரங்கமாய் தெரிவித்துள்ளனர். (ரஜினி ஒரு ஓட்டு போட்டா, நூறு ஓட்டு போட்ட மாதிரி-னு தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளுமா?)

ரஜினி மட்டுமல்ல, மற்ற திரை நட்சத்திரங்களும் கூட அதிமுகவுக்கே வாக்களித்திருப்பார்கள் என்றே  தெரிகிறது.
பாசத்தலைவன் மீண்டும் வந்தால், பாராட்டு விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதும் அதற்க்கான முக்கிய காரணம்.

காலையில் இரட்டை இலைக்கு வாக்களித்துவிட்டு, மாலையில் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் படம் பார்த்த ரஜினியின் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும். (?????)
இது தான் ரஜினியின் அரசியல் திறமையை காட்டுகிறது. (இப்படியே இருந்தா, அரசியல்ல பெருசா ஒரு ரவுண்ட் வருவீங்க...)
      

இந்த வார கருத்து :

வாரிசு அரசியல் என்பது வேறு. குடும்ப அரசியல் என்பது வேறு.
தன் மகனையோ, மகளையோ அரசியலில் நுழைப்பது வாரிசு அரசியல், தன் குடும்பத்தினர் அனைவரையும அரசியலில் திணிப்பது குடும்ப அரசியல்.

தன்னுடைய மகள் இந்திரா காந்தியை அடுத்து அரசியலுக்கு கொண்டு வந்து குடும்ப அரசியலை ஆரம்பித்து வைத்தவர் நேரு. தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பதவிக்கு வர வைத்து, குடும்ப அரசியலை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
- தமிழருவி மணியன்.

இந்த வார ஜோக்ஸ்:

"எப்படிங்க உங்க கார் ஆக்சிடெண்ட ஆச்சு"
"அதோ அங்கே ஒரு மரம் தெரியுதா"
"ஆமா,, தெரியுது"
"அது நேத்து ராத்திரி எனக்கு தெரியலை"

டாக்டர் : "இந்த ஆஸ்பத்திரிக்கு நான் தான் தலைவர்!"
அரசியல்வாதி: "நான் கூடத்தான் எங்க கட்சியில் டாக்டர்!!"

இந்த வாரம் ரசித்த  கவிதைகள்:

மற்ற எல்லாத்துளியும்
மண்ணில் விழுந்து கரைந்து விட...
உன் மேல் விழுந்த
மழைத்துளி மட்டும்
கவிதையானது.
(நீ வசிக்கும் தெரு - செஞ்சேரி குணசேகரன்)

தர்மாஸ்பத்திரியில்
இலவச மாத்திரை கொடுத்தும்
நோய் முற்றி இறக்கிறார்கள்.
பிரச்சனை மாத்திரை அல்ல...
சாப்பாட்டுக்குப் பின்
போட வேண்டும் என்பதே...
(தகப்பன் சாமி - சுமதிஸ்ரீ)

இந்த வார செய்தி :

இந்த தேர்தலில் 24591 பேர், 49 ஓ-வின் படி வாக்களித்திருக்கிறார்கள். உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்க கூடும்.

பல வாக்குச்சாவடிகளில் கட்சிகளின் ஏஜெண்டுகள், ஏன் ஒரு ஓட்டை வேஸ்டாக்குகிறீர்கள்" என்று கிண்டலடித்திருக்கிறார்கள், "ஓட்டு போடலை" அப்படினு சொல்றதுக்கு இங்க வரணுமா என்று தேர்தல் அலுவலர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

"யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்று வாக்குச்சாவடி அதிகாரி வைத்திருக்கும் 17-ஏ பதிவேட்டில் கையெழுத்து இட்டால் மட்டுமே போதுமானது என்பது பல வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே தெரியவில்லை. 49 ஓ-வுக்கான படிவம் இல்லை என்று வாக்காளரை மனது மாற்றியிருக்கிறார்கள். 

49 ஓ-வுக்கு விழுந்த ஓட்டுக்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கான மிக பெரிய அவமானம் என்பதை கட்சிகள் உணராமல், சாதாரணமாகவே எடுத்துக்கொண்டுள்ளன. ஒரு வேளை மின்ணனு இயந்திரத்தில் 49 ஓ-வுக்கென தனி பட்டன் வைக்கப்பட்டிருந்தால், அதிக வாக்குகள் அதற்கே விழுந்திருக்கும். இப்போது அரசியல் யாவாரம் பார்த்துக்கொண்டிருக்கும் பலரும் வேறு தொழிலை பார்க்க போக வேண்டிருந்திருக்கும்.

யோசிக்க வைத்த வலைப்பதிவு:
              

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து நாம் கற்றுக்
கொள்ள வேண்டிய 10 படிப்பினைகள் பற்றிய ஆஹா பக்கங்கள்


உதிரிப்பூக்கள் :

ரத்தவெறி ராஜபக்ஷ 2011 ஆம் ஆண்டின் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களுள் ஆறாவது இடத்தில் டைம்ஸ் பத்திரிக்கையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (டைம்ஸ் இப்போது காமெடி டைம்ஸ்)
இணையம் வைத்திருக்கும் அத்துணை சிங்களவர்கள் வாக்களித்தால் கூட அவ்வளவு ஓட்டுக்கள் பெற முடியாத நிலையில் முடிவுகள் இருப்பதால், ரொம்ப கடுப்பா இருக்குங்க எசமான்)  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தத் தெரிவில் பெற்றிருப்பது 95வது இடம்.

தேர்தல் முடிவுற்ற நிலையில் ஏன் ஆ.ராசா சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வர முயற்சிக்க வில்லை? திமுக தலைமை மொத்தமாக கைவிட்டு விட்டதா?

15 வருடம் தவமாய் தவமிருந்து பெற்ற மகளை அன்னிய மண்ணில் இழந்த சித்ரா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

14 வருடங்களுக்கு பின் ஆண் குழந்தையை பெற்றிருக்கும் "செஸ்" விஸ்வநாதன் - அருணா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் ( பத்திரமா பாத்துக்கோங்க)

தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்துக்கு தொண்டை கட்டியிருந்ததே இப்ப நல்லாயிருச்சா? (சீக்கிரம் வந்து, பரபரப்பா பேசுங்க தலைவா..)












வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்து, அரசியல்வாதிகளின் வயிற்றில் தேர்தல் கமிஷன் புளியை  கரைத்தது போதாது என்று, தேர்தலில் மக்களும் பொங்கி வந்து வாக்களித்து விட, ஆளுக்கொரு விளக்கம் சொல்லி , பீதியாகி கிடக்கிறார்கள் நம்மூரு அரசியல்வாதிகள் (இதுல பெரிய தலைகள் கூட தோற்க போகிறார்கள் என கிளம்பியிருக்கிறது புதிய பீதி) 


கார்டூன் கார்னர்:
மச்சி, ஐ.பி.எல்.லுக்கு அடுத்த ஜே போடலாமா?

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்