என் டைரி -2010 என்ற தலைப்பிலான தொடர் பதிவில் ,
ஆமினா அவர்களின் அழைப்பை ஏற்று, தொடர்கிறோம்.
எங்கள் டைரி ரெய்டு வந்த சி.பி.ஐ. வசம் இருப்பதால், வித்தியாசமான முயற்சியாக, அறை எண் பதினைந்தின் டைரியை உங்களுக்கு திருட்டுத்தனமாக சமர்பிக்கிறோம்.
(அடுத்தவங்க டைரியை படிக்குற சொகம்... அட அட....)
நான் இந்தப் பள்ளியின் பதினைந்தாம் எண் அறை. நான் இங்குள்ள சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம்.
அவர்களின் அடையாளம் என்பது பன்னிரெண்டாம் வகுப்பு அ1,அ,ஆ மாணவியர்கள்.
பாவம் அவர்கள் அனைவரும் வரும் மார்ச் 2011 பொதுத்தேர்வுக்காக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். சூறாவளியாக சுழன்றாடுகிறார்கள்.
மார்ச் மாதம் வரை அவர்களின் தேதிகள் முழுமையும் நிரப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பிடியை இறுக்கத்துவக்கிவிட்டனர். அம்மாடி ஒரு கழுத்தில் எத்தனை சுருக்குக்கயிறுகள்.
சென்ற வருடமும் இப்படித்தான் இருந்தது. இதே சூழல் ஆனால் வேறு மாணவியர்கள்.
2010- ல் இதே ஜனவரி மாதம் அவர்களும் அலை பாய்ந்துக் கொண்டிருந்தனர், போகி அன்று கூட வந்திருந்தனர், செய்முறை வகுப்பு என்று கூட்டமாய் கருவிகள் நோண்டினார்கள். மெல்லியதாய் சிரித்துக்கொண்டனர்.
வகுப்பு முடிந்த பின்னும் கலையாமல் படிக்கட்டுக்களில் தவமிருந்தனர். ஆசிரியர் இல்லாத பொழுதுகளில் சத்தமாய் சிரிந்தனர், என்னுடைய சுவர்களில் கூட பெயர் செதுக்கினார்கள். மார்ச்சில் தேர்வெழுதி, மே மாதம் தேர்ச்சி தகவல் பெற்றனர், ஜூனில் கல்லூரியில் கலந்தார்கள்.
சென்ற வாரம் கூட கல்லூரி விடுமுறை நாளில் இங்கே வந்திருந்திருந்தனர், என்னுள் உலவினர். தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் மீண்டும் ஒரு முறை அமர்ந்து மகிழ்ந்தனர்.
சென்ற வருட மாணவியரும், இந்த வருட மாணவியரும் கலந்திருந்த அந்த நாள் என் டைரிக்குறிப்பில் சிறந்த நாள்.
இந்த வருட மாணவியருக்கும், அடுத்த வருடம் இங்கே வந்துப் பார்க்கும் ஆசை முளைக்கும். நிறைய சந்தோஷ நிகழ்வுக்களும் நிகழ்ந்திருக்கிறது.
சுதந்திர தின விழாவில் இந்தியாவின் வரைப்படம் வரைந்து, விளக்குகளால் ஒளியேற்றியது, ஆசிரியர்கள் தின விழாவில் ஆசிரியர்கள் போல பேசி நடித்துக்காட்டியது, அவர்களிடம் பேட்டி எடுத்தது, ரம்ஜான் கஞ்சியை அனைவருடன் பகிர்ந்துக்கொண்டது, பிறந்த நாளுக்கு அளிக்கப்படும் சாக்லேட்டுக்களை பதுக்கிக்கொண்டது, வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்களைக் கொண்டு வகுப்பறையை அலங்காரம் செய்தது, ஒரு மழை நாளில் குளிரெடுத்து நடுங்கிய மாணவிக்கு, ஆய்வக இன்டக்சன் அடுப்பு மூலம் சுடுதண்ணி தயாரித்தது என எல்லா வகுப்பறை கொடுக்கும் சுகங்களையும் இவர்களுக்கும் நான் தந்திருக்கிறேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு என்னும் பெயரில் இவர்களை பத்து மாதங்கள் சுமந்திருக்கிறேன், என் குழந்தைகளை வெகு விரைவில் உலகத்தினை பார்க்க இருக்கிறார்கள். வகுப்பறை என்பதும் கருவறைதானே.
பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....
*********************************************************************************
தொடர்புடைய பதிவுகள்:
இந்த தொடர்பதிவை தொடர மாணவன், குறட்டை புலி, அஞ்சா சிங்கம், லட்சுமி, இரவு வானம் , சுந்தரா ஆகிய பதிவர்களை அழைக்கிறோம்.
(அப்பாடா இனி நிம்மதியா தூங்கலாம்)








